குறைந்த காற்றழுத்த நிலை.. தமிழகத்தில் இன்றும் தொடரும் மழை!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு இது வடகிழக்கு பருவமழை காலம். கன்னியாகுமரி அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போது மழை பெய்துவருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், "தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா, தமிழகம், இலங்கை ஆகியவற்றையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் திங்கட்கிழமை (இன்று) அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய கனமழை பெய்யும். பின்னர் படிப்படியாக தற்காலிகமாக மழை குறையும்," என்றார்.
தமிழ்நாட்டில் நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு:
மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 13 செ.மீ., சிவகாசி 11 செ.மீ., பேரையூர் 9 செ.மீ., திருமங்கலம், திருச்சுழி தலா 8 செ.மீ., உத்தமபாளையம் 7 செ.மீ., அருப்புக்கோட்டை 6 செ.மீ., தேவகோட்டை, சாத்தூர், சிதம்பரம், விருதுநகர், கீழ் அணைக்கட்டு தலா 5 செ.மீ., பரங்கிப்பேட்டை, மணிமுத்தாறு, ஆனைக்காரன் சத்திரம், கொள்ளிடம், சீர்காழி, சோழவரம் தலா 4 செ.மீ., திருவாடானை, முதுகுளத்தூர், ராசிபுரம், மானாமதுரை, செங்குன்றம் தலா 3 செ.மீ., சேத்தியாதோப்பு, கடலாடி, கருமந்துறை, பொன்னேரி, மாதவரம், வத்திராயிருப்பு, வேலூர், பேச்சிப்பாறை, கோவில்பட்டி, மயிலாடுதுறை, விருத்தசாலம், விளாத்திக்குளம், ஸ்ரீமுஷ்ணம், கழுகுமலை, விழுப்புரம், சங்கராபுரம், ராஜபாளையம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் நேற்று பகலில் வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், பெரம்பூர், மூலக்கடை, கொளத்தூர், கொடுங்கையூர், மைலாப்பூர். கிண்டி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.