வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்... கனமழை பெய்யுமாம் - சென்னைக்கு மழை எப்போ?
இலங்கை அருகில், இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் நீடிப்பதால், தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னை: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த மழையால் சென்னை தத்தளித்தது. குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். நவம்பர் 24ம் தேதி இரவில் பெய்த கனமழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது. இன்றோடு ஒரு வருடமாகிவிட்டது. இந்த ஆண்டு சரியான மழை பெய்யாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு எப்போது மழை நிற்கும் என்று மக்கள் ஏங்கித்தவித்தனர். இந்த ஆண்டு எப்போது மழை பெய்யும் என்று ஏக்கத்துடன் வானத்தை பார்க்கத் தொடங்கியுள்ளனர். மழை வருமா? வராதா என்பதுதான் சென்னைவாசிகளின் இன்றைய கேள்வியாக இருக்கிறது.
சென்னையில் பங்குனி மாதத்தை விட மோசமாக பகல் நேரங்களில் வெயில் அடிக்கிறது. இரவிலும், அதிகாலையிலும் குளிர் வாட்டி எடுக்கிறது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து ஆறுதலை தருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் பயிர்கள் காய்ந்து விவசாயிகள் ஆங்காங்கே அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் மரணமடைகின்றனர்.
திசை மாறும் மேகங்கள்
இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை, இது வரை வலுப்பெறவில்லை. வங்கக் கடல் அருகில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானாலும், காற்று வீசும் திசை மாற்றத்தால், இந்திய கடற்பகுதியில் இருந்து மழை மேகங்கள், வேறு பக்கம் திரும்பி விடுகின்றன.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்நிலையில், இலங்கை நாட்டின் அருகிலும், அந்தமான் அருகிலும், இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் நிலை கொண்டுள்ளன. அதனால், தென் மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் மழை
ராமேஸ்வரத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பகல் நேரத்தில் விட்டுவிட்டு மழையும் இரவில் சாரல் மழையும் பெய்து வருகிறது. சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. பிடித்து வந்த மீன்களை உலர வைக்க முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றி சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
சென்னைக்கு மழை எப்போது?
வடகிழக்கு பருவ மழை காலத்தில் சென்னையில் 3 மாதத்தில் சராசரியாக 79 செ.மீ. மழை பெய்யும். கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி வரை 114 செ.மீ. மழை பெய்தது. இதனால் காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதிக்கு மேல்தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பஞ்சத்தில் இருந்து சென்னை தப்பிக்கும்.