Exclusive: உபதேசம் கூற ரஜினிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை... வேல்முருகன் விளாசல்
சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் சூழலில் வன்முறை தீர்வாகாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியது பற்றி அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஒன் இந்தியா தமிழ் கருத்து கேட்டது.
அதற்கு அவர்கள் தெரிவித்த பதில்கள் பின்வருமாறு;
திருச்சி சிவா (திமுக கொள்கை பரப்புச் செயலாளர்):
''வன்முறையை எந்தக்காலத்திலும் எந்த ஒரு ஜனநாயக அரசியல் கட்சியும் ஆதரிக்காது. திமுகவின் நிலைப்பாடும் அதுதான். நாங்கள் அண்ணா வழியான அமைதி வழி போராட்டத்தையே நடத்துகிறோம். ஆகையால் ரஜினி கூறிய வன்முறை என்ற கருத்துக்கே இடமில்லை.''
முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூ.):
''ரஜினிகாந்த் பொத்தாம்பொதுவாக போகிற போக்கில் வன்முறை தீர்வாகாது என சொல்லிவிட்டு செல்லக்கூடாது. யார் வன்முறை செய்வது என்பதை குறிப்பிட வேண்டும். மேலும், குடியுரிமை சட்டம் விவகாரத்தில் துணிச்சலாக தனது கருத்தை கூற வேண்டும், அதைவிடுத்து உபதேசம் செய்வது ஏற்கத்தக்கதல்ல''.
வானதி சீனிவாசன் (பொதுச்செயலாளர், பாஜக):
''ரஜினி மிகத் தெளிவாக தனது கருத்தை கூறியுள்ளார், அதை வரவேற்கிறேன். முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், இந்தியக் குடிமக்களை குடியுரிமை சட்டம் எந்த இடத்திலும் பிரித்து பார்க்கவில்லை. அப்படியிருக்கும் போது போராட்டங்கள் நடத்துவது வீண் வேலை''.
வேல்முருகன் (தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி):
''சினிமாவில் இஸ்லாமியர்களுக்கு நல்லது செய்வது போல் மாணிக்பாஷாவாக ரஜினி நடித்தால் மட்டும் போதாது, நிஜ வாழ்க்கையிலும் அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டம் தொடர்பாக வாய் திறக்க மறுக்கும் ரஜினிகாந்த், எங்களுக்கு அறிவுரை மட்டும் ஏன் கூற வேண்டும், அவருக்கு அதற்கான எந்த தார்மீக உரிமையும் கிடையாது.''
தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ (ம.ஜ.க, தலைவர்):
''மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதையே நடிகர் ரஜினிகாந்த் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஏற்கனவே ஸ்டெர்லட் ஆலைக்கு எதிரான போராட்டம் பற்றியும் இப்படித்தான் பேசியிருந்தார். இப்போதும் அதைப்போலவே கருத்து கூறியிருக்கிறார். இளம் நடிகர் சித்தார்த்திடம் ரஜினிகாந்த் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.''
அதிமுகவிடம் கருத்தை அறிவதற்காக அக்கட்சியின் முக்கிய செய்தித்தொடர்பாளர் ஒருவரை தொடர்புகொண்டுபேசிய போது,வெளியூரில் இருப்பதால் ரஜினி ட்வீட் பற்றி தெரியாது என பதில் கிடைத்தது. இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை தொடர்பு கொண்ட போதும், வெளியூரில் இருப்பதால் இது பற்றி பேச முடியாது என பதிலளிக்கப்பட்டது.
மாணவர், மக்கள் போராட்டத்தை வன்முறை என்று வர்ணித்த ரஜினி.. வெடித்துக் கிளம்பும் கடும் கண்டனங்கள்!