மகளிர் தினம்: கராத்தே பெண்களுக்கு விருது வழங்கி கவுரவித்த ரஜினிகாந்த்
மகளிர் தினத்தையொட்டி, கராத்தேவில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு பெண்களுக்கு ரஜினிகாந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
Recommended Video
சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி கராத்தேவில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு ரஜினிகாந்த் விருதுகளை வழங்கினார்.
இன்று மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தனது வீட்டில் இந்திய கராத்தே வீராங்கனைகளுடன் மகளிர் தினத்தை கொண்டாடினார்.
இந்திய கராத்தே சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் கராத்தே தியாகராஜன், பொது செயலாளர் பாரத் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் கராத்தேவில் சிறந்து விளங்கி தேசிய அளவிலும் உலக அளவிலும் சிறந்துவிளங்கும் வீராங்கனைகளுக்கு ரஜினிகாந்த் விருதுகளை வழங்கினார்.
கராத்தேவை ரசித்த ரஜினி
ரஜினிகாந்த் முன்பு பெண்கள் கராத்தே அசைவுகளை செய்து காண்பித்தனர். அப்போது கடந்த 1980-இல் உலக கிராண்ட் மாஸ்டர் ஹான்ஷி கோகன் யமாகுச்சி சார்பில் சென்னையில் நடந்த கராத்தே நிகழ்ச்சியை ரஜினிகாந்த் அவர்களிடம் நினைவு கூர்ந்தார்.
மொத்தம் 12 பெண்கள்
ரஜினி வீட்டில் நடந்த மகளிர் தின விழாவில் கராத்தேவில் சிறந்து விளங்கும் 12 பெண் சாம்பியன்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சோனிகா விக்ரமன், என் ஹர்ஷா, பிரியங்கா, குந்தவி, யாமினி, ராஜேஸ்வரி, ஹரிபிரியா, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரியா ஜாதவ், ஒடிஸாவை சேர்ந்த வலேனா வாலன்டினா, டெல்லியைச் சேர்ந்த அம்ரித்பால் கவுர், மும்பையைச் சேர்ந்த சந்தியா ஷெட்டி, தெலுங்கானாவை சேர்ந்த சயீதா பலாக் ஆகியோரை ரஜினி கவுரவித்தார்.
முதல் முறையாக துணை ராணுவ படை
இந்த நிகழ்ச்சியின் போது கராத்தேவின் முக்கியதுவம் குறித்தும் அதனால் பெண்கள் பெற்ற பெருமை குறித்து விளக்கப்பட்டது. அதில் காமன்வெல்த் கராத்தே சாம்பியன், ஆசியன் கராத்தே சாம்பியன், தென்னிந்திய கராத்தே காமன்வெல்த் சாம்பியன் ஆகிய விருதுகளை பெண்கள் பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். துணை ராணு படைகளான இந்திய திபெத் எல்லை படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவற்றிலும் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா மற்றும் வருமான வரித்துறைகளிலும் கராத்தேவில் சாதித்த பெண்கள் முதல்முறையாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பழமையான தற்காப்பு கலை
கராத்தே என்பது ஒலிம்பிக் விளையாட்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று ஆகும். இது மிகவும் பழமைவாய்ந்த மற்றும் மிகச் சிறந்த தற்காப்பு கலையாகும். குறிப்பாக பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள மிகவும் பயனுடையதாகும். இன்றைய நாட்களில் லட்சோப லட்சக்கணக்கான பெண்கள் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தற்காப்பு கலையான கராத்தேவை கற்று வருகின்றனர்.
வீராங்கனைகள் பெருமிதம்
இதுகுறித்து வீராங்கனைகள் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரஜினியை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி. அவரும் எங்கள் கராத்தே அசைவுகளை ரஜினி பார்த்து பாராட்டி வியந்தார். இன்னும் சிறப்பாக விளையாடி நாட்டுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ரஜினி கூறியதாக வீராங்கனைகள் தெரிவித்தனர்.