ரசிகர்களை திடீரென மீண்டும் சந்தித்த ரஜினி...இது தான் விஷயமாம்!
சென்னையில் விடுபட்ட 200 ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து வருகிறார்.
சென்னை: கடந்த வாரம் ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்த நிலையில் இன்று திடீரென விடுபட்ட 200 ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்து வருகிறார்.
8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் கடந்த 15ம் தேதி முதல் நாள்தோறும் 3 மாவட்ட ரசிகர்கள் வீதம் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தொடக்க விழாவில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தான் வரமாட்டேன் என்று நினைப்பவர்கள் ஏமாந்தூ போவார்கள் என்று கூறினார். மேலும் இறுதி நாள் உரையின் போது போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் தயாராக இருங்கள் என்று கூறினார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக ரஜினி தனது பேட்டிகளிலும், டுவிட்டர் பதிவிலும் தெரிவித்திருந்தார். மேலும் தொடர்ந்து விடுபட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வு திட்டமிடப்படும் என்றார்.
இந்நிலையில் இன்று திடீரென முன் அறிவிப்புகள் எதுவுமின்றி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விடுபட்ட 200 ரசிகர்களுடன் ரஜினிகாந்த புகைப்படம் எடுத்து வருகிறார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி புகைப்படம் எடுத்த மாவட்டங்களில் இருந்து குறித்த நாளில் வரமுடியாத ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த திடீர் சந்திப்பு நடைபெற்று வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.