ஏப்ரல் 14-லிலும் கட்சி, கொடி அறிவிப்பு இல்லை- ரஜினி 'ஒரே போடு' - ரசிகர்கள் 'ஷாக்'
ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சி அறிவிப்பு என்று பரவி வரும் தகவலை ரஜினிகாந்த் மறுத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி அறிவித்தார். அவர் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் மற்றும் சின்னம் கடந்த தை பொங்கல் என்று அறிவிக்கப்படும் என்று தகவல்கள் பரவின.
எனினும் அதுபோன்ற ஒரு அறிவிப்பு ஏதும் இல்லை. இதனிடையே ஏசிஎஸ் கல்லூரி விழாவில் தெறிக்கவிடும் அளவுக்கு பேசிவிட்டு ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றார் ரஜினி.
இந்நிலையில் ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் கொடி மற்றும் பெயர் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டின்போது அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ராஜூ மகாலிங்கமும் சுதாகரனும் ரஜினியின் பெயர் வரும்படி சுமார் 10 பெயர்களை தேர்வு செய்து வைத்துள்ளாகவும் அதில் ஒன்றை ரஜினிகாந்த் இமயமலையிலிருந்து வந்தவுடன் தேர்வு செய்வார் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்தன.
இதனால் ரசிகர்கள் குஷியாகினர். இந்நிலையில் 15 நாட்கள் ஆன்மிக பயணத்தை 10 நாட்களாக சுருக்கிக் கொண்டு சென்னை வந்தார் ரஜினி.
அவரிடம் ஏப்ரல் மாதம் கட்சி தொடக்கம் என்ற தகவல் நிலவுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ரஜினி அதை மறுத்தார். ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்றார்.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.