வேட்டை நாயாக இல்லாமல் சோளக்காட்டு பொம்மையாக தேர்தல் ஆணையம்: ராமதாஸ் அட்டாக்
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வரும் ஆளும் கட்சியினரை தடுக்காமல் சோளக்காட்டு பொம்மை மாதிரி தேர்தல் ஆணையம் இருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
துடிக்கும் ஆளும்கட்சி
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் என்ன விலை கொடுத்தாவது இத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என ஆளும் கட்சி துடித்துக்கொண்டுள்ளது. அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் பணம் வினியோகித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் நேற்று முதல் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
பேனாவுக்குள் ரூபாய்
செய்தித்தாள்களுக்குள் வைத்தும், பால் பாக்கெட்டுகளுடன் சேர்த்தும் பணம் வினியோகிக்கப்படுகிறது. பேனாக்களில் ரீஃபிலை எடுத்துவிட்டு அதற்குள் 1000 ரூபாய் நோட்டை வைத்து வழங்குகிறார்கள் ஆளும் கட்சியினர். மேலும் அக்கட்சியினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பட்டப்பகலிலேயே வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுபாடா செய்து வருகிறார்கள். ஆனால் இதைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தருமபுரி டார்கெட் 200 கோடி
மற்ற தொகுதிகளைவிட தருமபுரி தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை செலவிட அதிமுக. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.3000 முதல் ரூ.5000 வரை பணம் வழங்கப்படுவதாக மக்களே குற்றம்சாற்றியுள்ளனர். பல இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை அப்பகுதியில் உள்ள பெண்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
காவல்துறை அராஜகம்
ஆனால், பணம் கொடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அவர்களை பிடித்துக் கொடுத்த பொதுமக்கள் மீதே வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்போவதாக மிரட்டி வருகிறது.
கைது செய்யக்கூடிய குற்றங்களைச் செய்தவர்களை பிடித்துக் கொடுக்கும் அதிகாரம் பொதுமக்களுக்கு உண்டு என்றும், அவ்வாறு பிடித்துத் தரப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 43வது பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், காவல்துறையினர் இந்த சட்டத்தை மதிக்காமல் ஆளுங்கட்சியின் விதிமுறை மீறல்களுக்கு அப்பட்டமாக துணை போகிறார்கள். இதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகளோ கண்களை மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடை தெரியா வினா
தருமபுரி மக்களவைத் தொகுதியில் ஆளுங்கட்சியின் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட புகார்களை பாட்டாளி மக்கள் கட்சியினர் கொடுத்தும் அவற்றின்மீது எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. அப்பாவிகள் கொண்டு செல்லும் ரூ.5000, ரூ.10,000 பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியினர் கொண்டு செல்லும் கோடிக்கணக்கான பணத்தை மட்டும் எப்படி கோட்டை விடுகிறது என்பது தான் விடை கிடைக்காத வினாவாக உள்ளது.
இனியாவது நடவடிக்கை எடுங்கப்பா
மொத்தத்தில் விழிப்புடன் செயல்படும் வேட்டை நாயாக திகழ வேண்டிய தேர்தல் ஆணையம், பெயரளவுக்கு மட்டும் பயமுறுத்தும் சோளக்கொல்லை பொம்மையாகவே உள்ளது. இனியாவது தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும், அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல்கள் நியாயமாக நடப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.