மீனவர் தூக்கு: நள்ளிரவு வரை சமாதான பேச்சுவார்த்தை- போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
ராமேஸ்வரம்: இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து போர்க்கோலம் பூண்ட ராமேஸ்வரம் மீனவர்களை சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சமாதானத்தை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் அவர்கள் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்தது. இந்த அநியாயத் தீர்ப்பைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்தது.
ராமேஸ்வரம் பகுதியே போர்க்களமானது. சாலை மற்றும் ரயில் பாதைகளில் மரங்களைப் போட்டும் டயர்களைக் கொளுத்தியும் போக்குவரத்தை மீனவர்கள் முடக்கினர்.
மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் பல மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டன.
இதனால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தங்கச்சிமடத்தில் ரயில் நிலையம் சூறையாடப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது. உச்சகட்ட கொந்தளிப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழு மீனவர் பிரதிநிதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 மீனவர்கள் அப்பாவிகள்; அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகமே மேல்முறையீடு செய்யும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டி போராட்டத்தைக் கைவிடுமாறு அரசுத் தரப்புக் கேட்டுக் கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
இதனை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.