வண்டலூர் பூங்கா வரலாற்றிலேயே முதல்முறையாக 6 குட்டிகளை ஈன்ற மண்ணுளிப்பாம்பு!
சென்னை: சென்னையில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் மண்ணுளிப்பாம்பு ஒன்று 6 குட்டிகளை ஈன்றுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான வனவிலங்குகள், உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இப்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் மண்ணுளிப்பாம்பு ஒன்று கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று 6 குட்டிகளைப் போட்டது.
அடை காத்து குட்டி:
இந்த பாம்புகள் முட்டையை வயிற்றுக்குள் அடைகாத்து குட்டி போடும் வகையை சார்ந்ததாகும். மண்ணுளிப்பாம்புகள் நிலத்தினுள் வாழக்கூடிய ஒரு பாம்பினமாகும்.
மண்ணில் வசிக்கும் பாம்பு:
மிக நேர்த்தியாகவும், விரைவாகவும் மண்ணை தோண்டக்கூடிய ஆற்றலை உடையது. நிலத்தில் காணப்படும் எலிகள், சுண்டெலிகள் போன்றவற்றை முதன்மை உணவாக கொண்டுள்ளது.
எலிகளின் எதிரி:
இந்த பாம்புகள் எலிகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது.
இருதலைப் பாம்பு:
வன உயிரின பாதுகாப்பு சட்டம் இந்த பாம்பின் தலை மற்றும் வால் ஒரே அளவிலும், ஒரே வடிவிலும் இருப்பதால் இருதலை பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.
இருதலை பாம்பு நம்பிக்கை:
பாம்பாட்டிகள் ஒரு சிலர் இந்த பாம்பின் வால் பகுதியில் காயங்களை ஏற்படுத்தி வாய், கண் உள்ளது போன்று வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றனர். எனவே இந்த பாம்பை பார்க்கும் பொதுமக்கள் இருதலை பாம்பு என்றே நம்பி விடுகின்றனர்.
தவறான எண்ணங்கள்:
இந்த பாம்பு நக்கினால் தொழுநோய் வரும் என்பதும், 6 மாதங்களுக்கு ஒரு முறை தலைகள் மாறிமாறி இயங்கும் என்பதும் தவறான நம்பிக்கை ஆகும்.
கடத்தப்படும் பாம்புகள்:
பல்வேறு காரணங்களுக்காக மண்ணுளிப்பாம்புகள் கடத்தப்படுகின்றன. அவற்றில் துளியும் உண்மை இல்லை.
பாதுகாக்கப்பட்ட உயிரினம்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பாம்புகள் வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972 இன் படி பாதுகாக்கப்பட்ட ஒரு உயிரினம் ஆகும்.