வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ50 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற செம்மரக் கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகள், உப்பு போன்ற அத்திவாசிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வருவாய் புனலாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து ஹாங்காங் புறப்பட தயராக இருந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 2 கண்டெய்னர்களை சோதனை நடத்தினர். அப்போது அதில் பழைய பேப்பர்களுக்கு நடுவே செம்மர கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பழைய பேப்பரை அனுப்பிய தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூரில் உள்ள உள்நாட்டு சரக்கு பெட்டக முனையத்தில் உள்ள லாரி மூலம் அவை அனுப்பி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது. கண்டெய்னரில் பழைய பேப்பர் அனுப்புவதாக கூறி அதற்க போலியாக ஆவணங்கள் தயாரித்து மத்திய கலால் துறையினரிடம் அனுமதி பெற்றுள்ளனர். பெங்களூரில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது பழைய பேப்பர் தான் இருந்துள்ளது. அப்படியானால் செம்மர கட்டைகள் கண்டெய்னர்களில் எப்படி வந்தது, வழியில் ஏற்றப்பட்டதா, அல்லது தூத்துக்குடியில் வைத்து ஏற்றினார்களா என்று சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.