தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்வதாலேயே விபத்துகள் நிகழ்கின்றன: ரயில்வே வாரிய தலைவர்
சென்னை: ரயிலில் தீப்பிடிக்கும் பொருட்களை பயணிகள் கொண்டு செல்வதாலேயே பெரும்பாலான தீ விபத்துகள் ஏற்படுவதாக இந்திய ரயில்வே வாரியத் தலைவர் அருண்நேந்திர குமார் கூறினார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வே 160-வது ஆண்டு புகைப்படக் கண்காட்சியை நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரயில் பெட்டிகளில் திடீரென்று தீப்பிடித்தால் அதுபற்றி ஓட்டுநருக்குத் தெரிவிக்கும் வகையில் புதிய கருவி தயாரிக்கப்பட்டு வருகிறது. மது உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்வதுதான் ரயில்களில் தீப்பிடிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்டவாளங்களில் விரிசல் ஏற்படுவதற்கு தட்பவெப்ப நிலைதான் காரணம். தண்டவாள விரிசலைக் கண்டறிவதற்கு கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆளில்லா ரயில்வே கிராஸிங்கால் விபத்துகள் ஏற்படுவதை, தடுக்க விரைவில் நாட்டின் அனைத்து ஆளில்லா ரயில்வே கிராஸிங்களிலும் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நவீனப்படுத்துவது தொடர்பாக முதல் கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்கால பயன்பாடுகளை கணக்கில் கொண்டும், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையிலும் பல முன்னேற்பாடுகளை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.