சென்னை, திருச்சி, மதுரை உள்பட 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்கள்... அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சி மேயர் பதவிகளில் சென்னை, திருச்சி, மதுரை உள்பட 6 மாநகராட்சிகள் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை அரசிதழில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கான இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு என்பதும், எவை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு என்பதும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் சென்னை உள்பட 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், வேலூர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய 6 மாநகராட்சி மேயர் பதவிகள், பெண்களுக்கு(பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை, தஞ்சாவூர், சேலம், திருப்பூர், ஈரோடு, ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவிகள் பொதுவானவையாக ஒதுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் பணிந்திரா ரெட்டி அரசிதழில் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications