திமுகவை தனியார் நிறுவனமாக மாற்றிவிட்டார் கருணாநிதி: ஜெயலலிதா குற்றச்சாட்டு
தூத்துக்குடி: கழகமே குடும்பம் என்று அண்ணா காலத்தில் இருந்த திமுக, தற்போது குடும்பமே கழகமாக மாறிவிட்டதாகவும், ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் தனியார் நிறுவனமாக திமுக ஆகிவிட்டதாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள ஜெயலலிதா இன்று தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கூறியதாவது:
வெத்துவேட்டு வாக்குறுதிகள்
திமுக தேர்தல் அறிக்கையில் 98 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது, அவை அனைத்துமே புழுகு மூட்டை என்று கூறிய ஜெயலலிதா, கடந்த 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய எதன் மீதும் தி.மு.க.இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை என்று குற்றம் சாட்டினார்.
தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை கடந்த 10 வருடங்களில் நிறைவேற்றாதது ஏன்? வருமான வரி உச்ச வரம்பை உறுதி அளித்தபடி ரூ.6 லட்சமாக தி.மு.க. ஏன் உயர்த்தவில்லை?
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை பார்த்து, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அதனை 6 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதனை கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக ஏன் செய்யவில்லை? ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் இதனை உயர்த்தி இருந்தால் கூட தற்போது வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
ஆனால் தற்போது திடீரென ஞானோதயம் பெற்றதுபோன்று வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகை 6 லட்சமாக உயர்த்தப்படும் என திமுக அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும், வெத்துவேட்டு வாக்குறுதி என்றும், எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஜெயலலிதா மேலும் கூறினார்.
துரத்துவோம், தோற்கடிப்போம்
கழகமே குடும்பம் என்று அண்ணா காலத்தில் இருந்த திமுக, தற்போது குடும்பமே கழகமாக மாறிவிட்டது. ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் தனியார் நிறுவனமாக திமுக ஆகிவிட்டது. இப்படிப்பட்ட கட்சியில் இருப்பது தங்களுக்கு இழுக்கு என கருதி, ஏராளமான திமுகவினர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியும் இதேப்போன்று குடும்ப கட்சியாக மாறிவிட்டது. திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தன்னலத்தை குறிக்கோளாகக்கொண்டு செயல்படுகிறது என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அகற்றவேண்டும். லோக்சபா தேர்தலில் திமுகவை முற்றிலும் தோற்கடிக்கவேண்டும் என்றும் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.