ஒழுங்கா இருக்கச் சொல்லு... இன்ஸ்பெக்டரின் மனைவியை வீட்டுக்கு வந்து மிரட்டிய ரவுடி!
சென்னை: சென்னையில் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராக இருப்பவரின் மனைவியை, வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்ற ரவுடி குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் குடியிருப்புக்கே வந்து அந்த ரவுடி மிரட்டியதால் காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த இன்ஸ்பெக்டர் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த யாரேனும் இந்த மிரட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ரவுடி ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சிவராம்குமார். தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இவர் அசோக்நகர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் சிவராம் குமாரின் மனைவி சிவகாமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்த வாலிபர் ஒருவர் சிவராம்குமாரின் வீட்டுக்கு சென்று சிவகாமியிடம் கத்தியை காட்டி மிரட்டியபடி உங்கள் கணவரை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள். தேவையில்லாத விசயங்களில் அவர் தலையிடுகிறார். இது அவருக்கு நல்லதல்ல. இது போல் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார் சிவகாமி. இருப்பினும் யந்து போகாமல் துணிச்சலுடன் அந்த வாலிபரிடம் நீ யாருடா? கத்தியால் குத்திருவியா என்று கோபத்துடனும், சத்தமாகவும் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து வேகமாக வெளியேறி ஓடி விட்டார். இதுகுறித்து தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார் சிவகாமி. பின்னர் அசோக் நகர் போலீசில் சிவகாமி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பல வருடமாக சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார் சிவராம்குமார். தி.நகரில் பணியாற்றியபோது பல வழக்குகளில் துப்பு துலக்கி பலரைக் கைது செய்தவராம். தற்போது ரவுடி ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications