கோவையில் துணிகரம்.. மின்சாதன உதிரி பாகங்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை
மின்சாதன உதிரி பாகங்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் உள்ள மின் சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடையின் பூட்டை உடைத்து 12 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து உள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை அடுத்த மரக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மின்னணு சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கடையில் பக்கவாட்டில் இருந்த கதவை உடைத்து அங்கு இருந்த 12 லட்ச ரூபாய் பணத்தை மட்டும் திருடி சென்று உள்ளனர்.
காலை வழக்கமாக கடையை திறந்த அந்த கடையின் உரிமையாளர் தேவாரம், கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து காவல் துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து , அங்கு பதிவான கைரேகைகளை எடுத்து , அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளையில் ஈடுபட்ட நபர் அந்த கடையில் இருந்த சி சி டி வி காட்சிகளின் பதிவுகளையும் எடுத்து சென்று உள்ளார். இதனால் கொள்ளையர்களை கண்டு பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அருகே உள்ள கடைகளின் சிசிடிவி கேமாரா பதிவுகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.