ஆர்கே.நகரில் ஒரு ஓட்டுக்கு ரூ.3000.. டோக்கன் வழங்கியிருப்பதாக மாஜி அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆர்கே.நகர் தொகுதியில் பொதுமக்களுக்கு 3 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் பொதுமக்களுக்கு 3 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்திளார்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். தேர்தல் ஆணையரை சந்திக்கும் போது ஓபிஎஸ் அணி சார்பில் என்னென்ன கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மாஃபா பாண்டியராஜன் 22ஆம் தேதி தேர்தல் ஆணையரை சந்திக்கும்போது, சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் 2 மாதங்களுக்குள் தேர்தல் கமிஷன் மேற்பார்வையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
5 கோரிக்கைகள்
இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுச் செயலாளருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களுடன் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கூட்டு தலைமையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது உள்பட 5 கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாக கூறினார்.
இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கே
இரட்டை இலை சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மாஃபா பாண்டியராஜன், ஓ.பன்னீர்செல்வம் சொன்னபடி தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்றார். இரட்டை இலை சின்னத்துக்கு உரியவர்கள் நாங்கள் தான் என்று கூறிய அவர், எங்களை பொறுத்தவரையில் இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.
2 நாட்களில் அறிவிப்பு
ஆர்கேநகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற அவர் தாங்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டதாக கூறினார். ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை ஆகியவை குறித்து இருநாட்களில் அறிவிப்பு வரும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
எங்களுக்குதான் சாதகம்
கங்கை அமரன் தனக்கு போட்டி வேட்பாளர் இல்லை என கூறியது குறீத்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கங்கை அமரனின் தன்னம்பிக்கையை நாங்கள் போற்றுகிறோம் என்றார். சசிகலா குடும்பத்தினரால் என்னுடைய சொத்துகள் அபகரிக்கப்பட்டன என்று சொல்லும் அவருடைய பிரசாரம் எங்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். கங்கை அமரன் சசிகலா பற்றி குற்றம் சொல்வது எங்களுக்கும் உடன்பாடு தான் என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
ரூ.3000 டோக்கன்
ஆர்கே.நகரில் பணம் பட்டுவாடா செய்வது குறித்து புகார் தெரிவித்து இருப்பதாக அவர் கூறினார். தேர்தல் கமிஷன் நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். ஆர்.கே.நகரில் ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வழங்கி இருக்கிறார்கள் என்றும் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டினார்.