ரூ.5.70 கோடி கடன் மோசடி வழக்கு.. பிரபல ஹோட்டல் உரிமையாளர் கைது
ரூ.5.70 கோடி கடன் மோசடி வழக்கில் பிரபல ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: பிரபல ஆசிப் பிரியாணி ஹோட்டல் குழும உரிமையாளர் மோசடி வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் மிகப் பிரபலமான உணவகங்களுள் ஒன்று 'ஆசிப் பிரியாணி'. அதன் உரிமையாளர் முகமது ஆசிப். அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் கோதண்டராமன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், ''ஆசிப் பிரியாணி நிறுவன உரிமையாளர், முகமது ஆசிப். அவரது இரண்டாவது மனைவி நந்தினி. இவர்கள் 2014 ஆகஸ்ட்டில் இருந்து, 2016 வரை, என்னிடம், 5.70 கோடி ரூபாய் கடன் பெற்று, பல கிளைகளை துவங்கினர். கடனுக்கு உத்தரவாதமாக, காசோலைகளை வழங்கினர். அவை, வங்கியில் பணமின்றி திரும்பின.
அதையடுத்து, அவரிடம் பணம் கேட்டபோது, கூலிப்படை வைத்து, கொலை செய்வதாக மிரட்டினார். ஜனவரி, 5ல் என்னை கொல்லும் முயற்சி நடந்தது. அதில், கடவுள் அருளால், நான் காயங்களுடன் தப்பினேன். இது தொடர்பாக, கோடம்பாக்கம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தாமல் இருக்குமாறும், வாங்கிய கடனை தந்து விடுவதாகவும், ஆசிப்பும், அவரது மனைவி ரம்ஜான் பேகமும், என்னிடம் பேசினர்.
அதன்படி, ஆசிப், 2 கோடி ரூபாய்க்கு, கார்ப்பரேஷன் வங்கி காசோலை கொடுத்தார். மேலும், 2 கோடி ரூபாய்க்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வரைவோலை கொடுத்தார். காசோலை, வங்கியில் பணமின்றி திரும்பியது. வரைவோலை போலி என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் அவரிடம் பணத்தை கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டு தர வேண்டும்''. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல் ஆணையர், புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முகமது ஆசிப் போலி வரைவோலைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஆசிப் முகமது அவரது இரண்டு மனைவிகளுடன் நேற்று கைது செய்யப்பட்டார்.