ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.7.56 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி
தருமபுரி: தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினரின் நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 7.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பிரிவு சாலையில் திங்கள்கிழமை பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த வியாபாரியின் காரைச் சோதனையிட்டபோது, ரூ. 5.12 லட்சம் இருந்தது தெரியவந்தது.
அந்தத் தொகைக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தருமபுரி கோட்டாட்சியர் ராமமூர்த்தி முன்னிலையில் ஒப்படைத்தனர்.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அந்தக் காரில் ரூ.2.44 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
அந்த பணத்தை கந்திகுப்பம் அருகேயுள்ள செட்டிப்பள்ளி பிரிவு சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் சுப்பிரமணி (30) வங்கியில் செலுத்த எடுத்துச் செல்வதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், ரூ.2.44 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.