எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பாரிவேந்தரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.75 கோடி மோசடி செய்த வழக்கில் எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பாரிவேந்தரின் ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பச்சமுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஜாமீன் மனு மீதான விசாரணை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது. மாணவர்களிடம் திருப்பித்தர ஒத்துக்கொண்ட ரூ.69 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.75 கோடி மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 26ம் தேதி பச்சமுத்து கைது செய்யப்பட்டார்.
பச்சமுத்துவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு செய்தனர். ஆனால், ஒருநாள் மட்டும் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து நேற்று காலை 7.30 மணி முதல் மாலை வரை பச்சமுத்துவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவர்கள் கொடுத்த பண மோசடி புகார்கள் குறித்தும், மதன் மாயமானது தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். விசாரணை முடிந்ததும் மாலை 5.30 மணிக்கு அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு பச்சமுத்து தாக்கல் செய்த மனு, சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு மீதான விசாரணை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. மாணவர்களிடம் திருப்பித்தர ஒத்துக்கொண்ட ரூ.69 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தங்கம் மனு தள்ளுபடி
எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று மதன் தாயார் தங்கம் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பச்சமுத்துக்கு ஜாமீன் வழங்கினால் தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தங்கம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பச்சமுத்து தரப்பு வாதம்
வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வழக்கறிஞர் குமார் வாதிட்டார். பாரிவேந்தருடன் எந்த தொடர்பும் இல்லை என்று மதன் எழுதிய கடிதத்திலேயே கூறப்பட்டிருந்தது என்றும், மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் வாங்க மதனுக்கு எந்த அதிகாரமும் எஸ்.ஆர். எம் வழங்கவில்லை என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.
மதனிடம் பணத்தைக் கொடுக்குமாறு எஸ்.ஆர். எம் தரப்பில் யாரும் கூறவில்லை என்றும், மனுதாரர்கள் யாரும் எஸ்.ஆர்.எம் பல்கலையில் நேரடியாக பணத்தைத் தரவில்லை என்றும், பணத்தை மதன் எப்படி செலவு செய்தார் என்பது பற்றி இதுவரை விசாரணை நடைபெறவில்லை என்றும் பச்சமுத்து தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
மாணவர்களிடம் மதன் பணம் வாங்கினாரா என்பது விசாரணைக்குப் பின்பே தெரியும் என்றும், மதன் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது ஏன் என்றும் வழக்கறிஞர் குமார் தனது வாதத்தில் முன்வைத்தார். விசாரணையின்போது வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை விசாரிக்க உள்ளதாக காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையின் கோரிக்கையை ஏற்று நீதிபதி பிரகாஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.