கிரானைட் கொள்ளை ஆய்வு: சகாயத்தை முடக்கும் தமிழக அரசு
மதுரை: தமிழகத்தில் சட்டவிரோத கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு அரசு தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்காததால், பணிகள் துவங்குவது தாமதமாகிறது. இந்த தாமதத்திற்கு காரணம் தமிழக அரசுதான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தின் கிரானைட், தாது மணல் கொள்ளைகளைப் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டு இரண்டு மாதங்கள் நெருங்கிவிட்டன. ஆனால் ஆய்வு பணிகள் இன்னும் நடந்தபாடில்லை.
உடனடியாக சகாயம் தனது பணிகளை முழுவீச்சில் தொடங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நடக்கும் கிரானைட் கொள்ளை, கனிம மணல் கொள்ளைகள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் அதிரடி உத்தரவிட்டது.
சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு மாத காலத்துக்குள் இதனை விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் போனது. உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
மறுபடியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்கள். அதனையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அபராதமாக 10 ஆயிரம் ரூபாயையும் நீதிபதிகள் விதித்தனர்.
அக்டோபர் 31க்குள்
கனிம வள முறைகேடு குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கேட்கும் அனைத்து வசதிகளையும் தமிழக அரசு நான்கு நாட்களுக்குள் அவருக்குத் தர வேண்டும். அதில் ஏதாவது குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை சகாயம் அணுகலாம்' என்று தலைமை நீதிபதி கௌல், சத்தியநாராயணா அடங்கிய பெஞ்ச் அறிவித்தது. கடந்த அக்டோபர் 28இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 28,29,30,31க்குள் ஆய்வுக்கான அனைத்து நடவடிக்கையும் தொடங்கியிருக்கவேண்டும்.
அறிக்கை போர்
கிரானைட் முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் இந்நாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் தினசரி அறிக்கைப் போர்தான் நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் ஆய்வுப் பணிகள் நடந்தபாடில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
14 பேர் குழு நியமனம்
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 31ஆம் தேதி மாலையில்தான் அவசர அவசரமாக இரண்டு பக்க உத்தரவை தலைமைச் செயலாளர் மோகன்வர்கீஸ் சுங்கத் அனுப்பி வைத்தார். சகாயத்திற்கு உதவ 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவில், நாமக்கல் மாவட்ட கனிமவள மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் முருகானந்தம், சென்னை டாமின் உதவி இயக்குனர் சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட உதவி புவியியலர் பெருமாள்ராஜா, புதுக்கோட்டை உதவி புவியியலர் ரமேஷ் ஆகிய 4 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணி விடுவிப்பு எப்போது?
இவர்களில் முருகானந்தம், ரமேஷ் மீது சில புகார் இருப்பதால், வேறு நபர்களை நியமிக்கும்படி சகாயம், அரசிடம் தெரிவித்தும், அது ஏற்கப்படவில்லை.
மேலும் அறிவியல் நகரத் துணைத்தலைவராக உள்ள அவர் மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு ஆய்வுக்கு செல்ல தலைமைச்செயலர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக 'அவர்களிடம் 'அப்பாயின்மென்ட்' கேட்டும், அழைப்பே இல்லையாம். இதனால் சகாயம் பணிகளை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆதரவு
திங்கட்கிழமையன்று அவர் மதுரை வந்து ஆய்வை துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பணிகளை துவங்கவில்லை. இதனிடையே சகாயத்துக்கு தமிழக அரசு தடைகள் போடப்போட அவருக்கான ஆதரவு மாநிலம் முழுவதும் பெருகிவருகிறது.
மதுரை மட்டும் ஏன்?
இந்த நிலையில் புதிதாக சர்ச்சை ஒன்று எழுந்து உள்ளது. ''சகாயம் தலைமையிலான குழு மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட், தாது மணல் கொள்ளைகளை மட்டும் விசாரித்தால்போதும். மற்ற மாவட்டங்களில் விசாரிக்கத் தேவை இல்லை'' என்ற சூழலை அரசு உண்டாக்கியது.
சகாயத்திற்கு ஆதரவு போஸ்டர்
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள், விவசாய - தொழிலாளர் சங்கங்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து சகாயத்துக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளனர். மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் சகாயத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் ஆதரவுக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
கனிமவளக்கொள்ளை
மதுரையைவிட அதிகமாக பல இடங்களில் கனிமவள கொள்ளைகள் நடந்துள்ளன ராதாபுரம் என்ற ஒரு பகுதியில் மட்டுமே 55 குவாரிகள் உள்ளன. இந்தக் கொள்ளைகள் எல்லாம் வெளியே தெரிந்துவிடும் என்பதால் சகாயத்தை மதுரையோடு நிறுத்த நினைக்கிறார்கள். இதை முறியடிப்பது நமது ஒற்றுமையில் இருக்கிறது'' என்று 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
முடக்கிய அரசு
கிரானைட் பிரச்னை 10 மாவட்டங்களில் இருக்கிறது. கார்னெட் விவகாரம் 4 மாவட்டங்களில் இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மணல் கொள்ளை நடக்கிறது. அதனால்தான் 'தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும்' என்று நீதிபதிகள் சொன்னார்கள். ஆனால், தமிழக அரசு இதனை வசதியாக மறைத்து மதுரைக்கு மட்டும் விசாரணை என்று சுருக்கிவிட்டது.
குவியும் மனுக்கள்
தமிழ்நாடு முழுவதும் சகாயம் விசாரிக்கப் போகிறார் என்று நினைத்த பொதுமக்கள் எல்லா ஊர்களிலும் இருந்து சகாயத்துக்கு மனுக்களை அனுப்பி வருகிறார்கள். தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இருந்து சகாயம் அலுவலகத்துக்கு வந்து மனுக்கள் கொடுத்துச் செல்கிறார்களாம். எனவே தமிழக அரசு அறிக்கை போர் நடத்துவதை விட்டுவிட்டு முழுவீச்சில் தமிழகம் முழுவதும் விசாரணையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.