ஆந்திரா என்கவுன்ட்டர் உண்மை எனில் போலீசார் இந்த 5 கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களா?
சென்னை: தற்காப்புக்காக தான் செம்மரங்களை வெட்டியவர்களை சுட்டுக் கொன்றதாக ஆந்திரா போலீசார் கூறுவது நம்பும்படி இல்லை என பலர் கூறுகிறார்கள்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். அவர்களை தற்காப்புக்காக சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் திட்டமிடப்பட்டது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆந்திரா போலீசார் கூறுவது பொய் என்று பலர் கூறுகிறார்கள். என்கவுன்ட்டர் உண்மை எனில் ஆந்திர போலீசாரால் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா?

உடல்கள்
காட்டுக்குள் சோதனை நடத்த சென்றபோது அங்கு 100 முதல் 200 பேர் மரம் வெட்டிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் தங்களை கோடாரியால் தாக்க வந்ததாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்தனர். அதனால் தான் அவர்களை நோக்கி சுட்டதாகவும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். அவ்வளவு பெரிய வனப்பகுதியில் போலீசார் சுட்டால் ஓடவா இடம் இல்லை. அப்படி இருக்கையில் இறந்தவர்கள் இரண்டு இடங்களில் குவியலாக கிடந்தது எப்படி?

துப்பாக்கி குண்டு காயம்
இறந்த 20 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வெளியேறியுள்ளன. அதனால் அவர்களை அருகில் இருந்து தான் சுட்டிருக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் கூறுவது போன்று தூரத்தில் இருந்து சுட்டிருந்தால் குண்டுகள் இறந்தவர்களின் உடல்களில் இருந்திருக்க வேண்டும். இதற்கு போலீசார் என்ன பதில் வைத்துள்ளனர்?

ஆடைகள்
இறந்தவர்களின் உடல்களில் ஜட்டியும், பனியனும் தான் உள்ளது. அடர்ந்த காட்டுக்குள் அவர்கள் உள்ளாடையுடன் திரிய முடியாது. அப்படி என்றால் போலீசார் அவர்களின் உடல்களை கிழித்தெறிந்துவிட்டு பின்னர் சுட்டார்களா? அப்படி என்றால் அது என்கவுன்ட்டரே இல்லையே.

ஆயுதங்கள்
சோதனை நடத்த சென்ற இடத்தில் இருந்து போலீசார் சில அரிவாள்கள் மற்றும் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். அப்படி இருக்கையில் அத்தனை ஆயுதங்களுடன் அவ்வளவு பெரிய படையாக போலீசார் சென்றது தேவைதானா?

செம்மரக்கட்டைகள்
இறந்து கிடந்தவர்களுக்கு அருகில் கிடந்த செம்மரக் கட்டைகளில் பெயிண்டால் அடையாளம் வைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் அவை ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களும், ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். ஒரு குடோனில் இருந்து அந்த கட்டைகளை என்கவுன்ட்டர் நடந்த இடத்திற்கு கொண்டு வந்து இறந்தவர்களுக்கு அருகே போட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதை போலீசார் தான் செய்தார்களா?












Click it and Unblock the Notifications