நானா சினிமாவிலா? அதுவும் நயன்தாராவுக்காக.... மனம் திறக்கும் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன்
தனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்: நடிகை நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானதை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் மறுத்துள்ளார். தனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை பாடியில் சரவணா ஸ்டோர்ஸ் கடை திறக்கப்பட்டதை முன்னிட்டு அதன் உரிமையாளர் சரவணன், நடிகைகள் ஹன்சிகா, தமன்னாவுடன் விளம்பரப் படங்களில் நடித்தார்.
இதற்கு சமூகவலைதளங்களில் பயங்கரமாக கலாய்த்து மீம்ஸ்களை உலவ விட்டனர். இந்நிலையில்உழைப்பால் உயர்ந்த சரவணன் அவரது கடையை பிரபலப்படுத்துவதில் விளம்பரங்களில் நடித்தால் என்ன தவறு என்று ஒரு சாரார் ஆதரவும் தெரிவித்தனர்.
திருச்செந்தூரில்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் வந்தார். அங்கு ரூ.1 கோடி மதிப்பிலான தங்க வேலை சுவாமிக்கு காணிக்கையாக சாத்தினார்.
நயன்தாரா ஹீரோயின்...
அப்போது சரவணன் விரைவில் படத்தில் நடிக்கவிருப்பதாகவும், தன்னுடைய ஹீரோயின் நயன்தாரா என்றும் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகின.
மறுப்பு
இந்நிலையில், இதுகுறித்து சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்திடம் கேட்டபோது சினிமாவில் நடிப்பதாக வந்த செய்திகள் வதந்தியே என்றும் அவருக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தனர்.
ரசிகர்கள் நிம்மதி
ஹன்சிகா, தமன்னாவுடன் விளம்பர படங்களில் சரவணன் நடித்ததற்கே ரசிகர்களும், நெட்டிசன்களும் கலாய்த்தனர். நயன்தாராவுடன் நடிக்கப் போவதாக வந்த தகவலையும் கூட அவர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்ற அறிவிப்பு சரவணா ஸ்டோர்ஸ் தரப்பிலிருந்து வந்துள்ளது.