நடராஜனுக்கு அஞ்சலி செலுத்த 5 அமைச்சர்களாவது வருவாங்கன்னு நினைச்சேனே... நொந்து புலம்பிய சசிகலா!
நடராஜனுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள் வராதது குறித்து கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம் சசிகலா.
Recommended Video

சென்னை: கணவர் நடராஜன் இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 5 அமைச்சர்களாவது வருவார்கள் என தாம் எதிர்பார்த்ததாக சொந்தங்களிடம் நொந்து புலம்பியிருக்கிறார் சசிகலா.
'பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வர வேண்டும் என்றால், நடராஜன் மரணத்தை உறுதிப்படுத்தி எம்.பி ஒருவர் கையெழுத்திட்ட கடிதம் வேண்டும்' என சிறைத்துறை விதிகள் அறிவுறுத்தியது. இதையடுத்து, அ.தி.மு.க எம்.பிக்களில் பலரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதும், கையெழுத்திட மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, கோவை அ.தி.மு.க எம்.பி நாகராஜ், பரோல் விடுப்புக்கான மனுவில் கையெழுத்திட்டார். கூடவே, நடராஜனின் இறுதி நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். நேற்று தஞ்சையில் பேட்டியளித்த சீமான், ' அ.தி.மு.கவின் ஒரு எம்.பிகூட பரோலுக்காக கையெழுத்திடவில்லை. தமிழ்நாட்டில் பண்பாடற்ற அரசியல் நடக்கிறது' எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

முதல்வர் அட்வைஸ்
இந்நிலையில், நாகராஜ் கையெழுத்திட்டதாக வெளியான தகவல், அ.தி.மு.கவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. சசிகலாவுக்காக துக்க நிகழ்வில் பங்கேற்றும் முடிவில் இருந்துள்ளனர் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள். அவர்களிடம் பேசிய முதல்வர், ' நீங்கள் கலந்து கொண்டால், இதை வேறு மாதிரி அந்தக் குடும்பம் திசைதிருப்பிவிடும். அதிகாரம் அவர்கள் பக்கம் இருப்பதாகக் கதைகட்டிவிடுவார்கள். மீண்டும் ஸ்லீப்பர் செல்கள் என்ற வார்த்தையை அவர்கள் உபயோகப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். நல்லெண்ணத்தில் நீங்கள் கலந்து கொண்டாலும், அரசியலாக்கிவிடுவார்கள்' என எச்சரித்திருந்தார்.

சொந்தங்களிடம் நொந்த சசிகலா
கோவையில் இருந்து எம்.பி நாகராஜ் கலந்து கொண்டது சசிகலாவுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இதைப் பற்றி உறவினர்களிடம் பேசிய சசிகலா, ' ஐந்து அமைச்சர்களாவது கலந்து கொள்வார்கள் என நினைத்தேன். அதிகாரம் இருந்தவரையில் நம் பின்னால் அனைவரும் வந்து கொண்டிருந்தார்கள். இப்போது நம்மையே புறக்கணிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் யார் என்பதைக் காட்ட வேண்டிய நேரம் வரும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாகராஜனை விசாரித்த போலீஸ்
கோவை எம்.பி நாகராஜனின் பின்னணி குறித்து விசாரித்தோம். " கொடநாடு எஸ்டேட் மேலாளரின் தொடர்பில்தான் சசிகலாவின் ஆதரவாளராக மாறினார். எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் மர வேலைகளைச் செய்து வந்த சஜீவனின் பெயர் அடிபட்டது. தொடர்ந்து சில மரணங்களும் நிகழ்ந்தன. இந்த சம்பவத்தில் நாகராஜனின் பின்னணியைப் போலீஸார் விசாரித்தனர். மரணமடைந்த டிரைவர் கனகராஜ், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வி.சி.ஆறுக்குட்டியிடம் பணிபுரிந்தவர். இதையே காரணமாக வைத்துக் கொண்டு ஆறுக்குட்டியிடம் சேலம், ஆத்தூர் போலீஸார் விசாரணையை நடத்தினர்.

ஒன்றாக உட்கார்ந்து பேசுங்க
இந்த வழக்கில் நம்மைச் சிக்க வைத்துவிடுவார்கள் என நினைத்த ஆறுக்குட்டி, எடப்பாடி பழனிசாமி அணியில் தஞ்சமடைந்தார். கொடநாடு விவகாரத்தில் நாகராஜனைச் சிக்க வைக்கும் வேலைகளும் நடந்தன. தொழில்முறையில் வழக்கறிஞரான நாகராஜன், மனதில்பட்டதை நேருக்கு நேராகக் கூறுவதில் தயக்கம் காட்டாதவர். ' எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுக்கவில்லை என்றால் நான் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும்' என அதிர வைத்தவர். தினகரனை நேரடியாக ஆதரித்து வருபவர். கடந்தாண்டு நவம்பர் மாதம் திருப்பூர், பெருமாநல்லூரில் தினகரன் நடத்திய கூட்டத்தில் இவர் பங்கேற்கவில்லை. அப்போதே அணி மாறிவிட்டாரா என்ற பேச்சுக்கள் எழுந்தன. இப்போது பரோலில் கையெழுத்திட்டதன் மூலம் சசிகலா ஆதரவை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் நாகராஜ்" என்கின்றனர் கோவை அ.தி.மு.கவினர்.












Click it and Unblock the Notifications