தமிழகத்தின் முதல்வராகிறார்... மக்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத சசிகலா!
பொதுமக்கள் முன்பாக எந்த பொதுக்கூட்டத்திலும் பேசாமல், மக்களை ஒரு முறை கூட நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் தமிழக முதல்வராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். 30 நாட்கள் முடியும் முன்பாகவே பொதுச்செயலாளரான சசிகலா, இரண்டே மாதத்தில் ஆட்சியை தன் கட்டுப்பாட்டுக்கொண்டு வந்து முதல்வராக அமர உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக கடந்த 33 ஆண்டுகளாக உடன் வசித்த சசிகலா எந்த பொது நிகழ்வுகளிலும் பங்கேற்காமல், மக்களை நேரடியாக சந்திக்காமல் இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற போது முதல் முறையாக பேசினார். பின்னர், இன்று நடைபெற்ற அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் இரண்டாவது முறையாக பேசியுள்ளார்.

தமிழக மக்கள் ஓட்டுப்போட்டது ஜெயலலிதா என்ற மிகப்பெரிய தலைமைக்காகத்தான். அவர் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட என்னவே கட்சி விவகாரமாக இருக்கலாம். ஆனால் தமிழக முதல்வர் என்ற பதவி மக்களால் தேர்வு செய்யக்கூடிய ஒரு பதவி. ஆளுங்கட்சி பெரும்பான்மையாக இருக்கிறது என்பதற்காக திடீரென்று மக்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
அவரும் மக்களை சந்திக்காமலேயே முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்யப் போகிறார். சட்டசபையில் அவரது உரை எப்படியிருக்கும்? புள்ளி விபர புலியாக மாறுவாரா? அல்லது தனக்கு பதிலாக வேறு யாரையாவது பேச வைப்பாரா? போக போகத் தெரியும்.












Click it and Unblock the Notifications