திவாகரனின் அறக்கட்டளை தொடக்க விழா... தடாலடி தடை போட்ட சசிகலா!
திவாகரன் குடும்பத்தினர் தொடங்க இருந்த அறக்கட்டளை விழாவுக்கு தடாலடியாக தடை போட்டுவிட்டார் சசிகலா.
சென்னை: அறக்கட்டளை தொடங்கி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த திவாகரன் கோஷ்டிக்கு தடாலடியாக தடை போட்டிருக்கிறார் சசிகலா. இதனால் திவாகரன் குடும்பத்தினர் நடத்த திட்டமிட்டிருந்த அறக்கட்டளை தொடக்க விழா நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தினர் அதிமுகவை கபளீகரம் செய்ய முனைந்தனர். முதலில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினார். அத்துடன் முதல்வர் பதவிக்கும் பேராசைப்பட்டார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குதான் சசிகலாவால் செல்ல நேரிட்டது.
திவாகரன் மும்முரம்
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றினார். அவரும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சிறையில் இருக்கிறார். இதனிடையே அதிமுகவில் தங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என சசிகலாவின் தம்பி திவாகரன் தரப்பு படுதீவிரமாக முயற்சித்தது.
ஜெயானந்த் முயற்சி
ஆனால் திவாகரன் தரப்புக்கு சசிகலா க்ரீன் சிக்னல் தரவே இல்லை. திவாகரன் மகன் ஜெயானந்த் பலமுறை சசிகலாவை சந்தித்து பேச முயன்றும் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் அப்பல்லோவில் பேசும் வீடியோ இருக்கிறது என திவாகரன் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக்கில் பதிவு போட பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திவாகரன் அறக்கட்டளை
இதில் சசிகலா மிகவும் அதிருப்தி அடைந்து போனாராம். இந்நிலையில் ஜெயானந்த் தமது பிறந்தநாளையொட்டி விரைவில் திவாகரன் அறக்கட்டளை தொடங்கப்படும் என கூறியிருந்தார். ஏற்கனவே ஓம் முருகா என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை திவாகரன் குடும்பம் நடத்தி வருகிறது.
அறக்கட்டளைக்கு தடை
புதிய அறக்கட்டளையை தொடங்கி டெல்டா மாவட்டங்களில் தங்களுக்கும் செல்வாக்கு இருக்கிறது என கூறி புதிய கோஷ்டியை உருவாக்க திவாகரன் தரப்பு முயற்சித்திருக்கிறது. ஆனால் இப்போது எந்த ஒரு அறக்கட்டளையும் தொடங்கி சர்ச்சைக்கு வழிவகுக்க வேண்டாம் என சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து ஆர்டர் போட்டுவிட்டாராம். இதனால் திவாகரன் தரப்பு அறக்கட்டளை தொடக்க விழா நிகழ்ச்சியை தற்போது ரத்து செய்துள்ளது என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.