ஜெ.வின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளையில் சசிகலாவின் 'தூரத்து சொந்ததுக்கு' தொடர்பு?
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளையில் சசிகலாவின் தூரத்து சொந்தம் ஒருவருக்கே தொடர்பிருப்பதாக கூறப்படுகிற்து.
சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் சசிகலாவின் தூரத்து சொந்தமாக கூறப்பட்டு வரும் நபரின் கைவரிசை இருக்கலாம் என கூறப்படுகிறது.
திவாகரன், தினகரன், சுதாகரன், இளவரசி உள்ளிட்ட சசிகலாவின் உறவு முறைகள் தமிழகம் அறிந்ததுதான். அதேநேரத்தில் அவ்வப்போது சசிகலாவின் உறவினர்கள் என வேறு சில பெயர்களும் அடிபடுவது உண்டு,
இவர்களையும் சேர்த்துதான் ஜெயலலிதா அதிமுகவை விட்டு துரத்தியிருந்தார். இருந்தபோதும் தமிழகத்தை மண்டலங்களாக பிரித்து சசிகலா கோஷ்டி, அதிமுகவை கஸ்டடியில் வைத்திருந்தது.
சொத்துகள் பறிமுதல்
இதில் கொங்கு மண்டலத்தை ஆட்டி வைத்த சசிகலாவின் தூரத்து சொந்தத்தின் சொத்துகள் அனைத்துமே ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே பறிக்கப்பட்டு துரத்திவிடப்பட்டார். அவர் மீது அடுத்தடுத்த வழக்குகள் பாய்ந்தன.
கூட்டாளி கொங்கு எம்.பி
இந்த தூரத்து சொந்தத்தின் கட்டுப்பாட்டிலும் சில அமைச்சர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கும் கொங்கு மண்டல எம்பி ஒருவருக்கும்தான் கொடநாட்டு பணப் போக்குவரத்து அத்துபடியாம். கொடநாட்டில் இருந்து கண்டெய்னர் லாரிகளில் பணத்தை அனுப்பி வைத்தவர்கள்தான் இவர்கள்.
தினகரனுக்கு எதிர்ப்பு
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினகரன் கட்டுப்பாட்டில் கொடநாடு போனது சசிகலாவின் தூரத்து சொந்தத்துக்கு பிடிக்கவில்லையாம். அதனால் கொடநாடு பங்களாவை சூறையாடும் திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அதுவும் தினகரன் கைது செய்யப்படுகிறார் என உறுதியான நிலையில் இது நடந்துள்ளது.
ஆபரேஷன் சக்ஸஸ்
கொடநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரொக்கம் மற்றும் ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான கைக் கடிகாரங்கள் 'வெற்றிகரமாக' கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்கிறது அதிமுக வட்டாரங்கள். இதில் ஜெயலலிதாவின் கைக் கடிகாரங்களைத்தான் திருட மட்டுமே வந்ததாக போலீஸ் கூறுகின்றனர்.
பல கோடி ரூபாய் மதிப்பு
உண்மையில் ஜெயலலிதாவின் ஒவ்வொரு கைக்கடிகாரமுமே பல கோடி ரூபாய் மதிப்பிலானவை. கை கடிகாரங்களில் 12 எண்களுமே வைரங்களைக் கொண்டவை. இவற்றைத்தான் சசிகலா கட்டிக் கொண்டு வலம் வந்தார்.
இருவரது பெயர்களும்...
இந்த கைக் கடிகார விவகாரங்கள் மிகுந்த நெருக்கமான நபர்களுக்குத்தான் தெரியும். அதனால்தான் கொங்கு மண்டலத்தில் இந்த இருவரது பெயர்கள்தான் அதிகம் அடிபடுகின்றன. அதுவும் சர்ச்சைக்குரிய எம்.பி. ரொம்பவே பதுங்குவதைக் கண்டு அதிமுகவினர் ஓஹோ உங்க வேலைதானா இது என முணுமுணுக்கவும் தொடங்கிவிட்டனர்.
எம்பி ஐடியாதானாம்
அந்த எம்.பி.யின் ஐடியாபடியே கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து தீர்த்து கட்டப்படவும் செய்கிறார்கள். போலீசாரும் வழக்கை முடித்துவிட தீவிரமாய் முயற்சிக்கிறது என்பதும் அதிமுகவினர் தரும் தகவல்.