ஜெயிலிருந்தபடி தமிழக ஆட்சியை "கன்ட்ரோல்" செய்யப் போகும் சசிகலா.. அச்சத்தில் மக்கள்!
சென்னை: தான் முதல்வராக முடியாவிட்டாலும் கூட தனது ஆட்சியை கொண்டு வருவதில் கிட்டத்தட்ட சசிகலா வென்று விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இனி சிறையிலிருந்தபடி அவர் தமிழக ஆட்சியை கட்டுப்படுத்துவார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஜெயிலுக்குப் போவதற்கு முன்பே தினகரனை அவர் துணைப் பொதுச் செயலாளராக்கி விட்டுத்தான் போயுள்ளார். தினகரன்தான் அவரது ரிமோட். அவர் மூலமாகத்தான் தான் நினைப்பதையெல்லாம் சாதிக்கப் போகிறார் சசிகலா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இனி சசிகலா குடும்பத்தின் ஆட்சியைத்தான் எடப்பாடி பழனிச்சாமி மூலம் பார்க்கப்போகிறது தமிழகம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஆட்சி எப்படி இருக்கும் என்பதை விட இந்த ஆட்சியால் மக்களுக்கு என்ன பலன் இருக்கப் போகிறது என்பதுதான் மிகப் பெரிய புதிராக, குழப்பமாக இருக்கிறது.
இன்னொரு அடிமை ஆட்சி
இன்னொரு அடிமை ஆட்சியாகவே இது நிச்சயம் இருக்கும். அதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது. ஜெயலலிதா ஆட்சியில் எப்படி அவர் சொன்னதுக்கு மட்டும் மண்டையை ஆட்டினார்களோ அதே போலத்தான் இப்போது சசிகலா மூலம் வரப் போகும் உத்தரவுகளுக்கும் இந்த ஆட்சியாளர்கள் மண்டையை ஆட்ட வேண்டும்.
ஃபெரா கேஸ் தினகரன்
ஃபெரா கேஸ் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் சிக்கியுள்ளவரான டிடிவி தினகரனும், நில அபகரிப்பு வழக்கில் சிக்கியவரான டாக்டர் வெங்கடேஷும்தான் இந்த அரசை வழி நடத்தப் போகும் கைடுகளாக இருக்கப் போகிறார்கள் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.
குடும்ப ஆதிக்கம் அதிகரிக்கும்
எல்லாவற்றுக்கும் மூலப் பிதாமகரான நடராஜனின் ஆதிக்கத்தையும் ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் மீற முடியாது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.
விலை போன எம்.எல்.ஏக்கள்
இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் அத்தனை எம்.எல்.ஏக்களும் நிச்சயம் பணம் அல்லது பொருள் ஆதாயத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே அதைத் தருகின்றனர் என்பதையும் நாம் மறந்து விட முடியாது. அவர்கள் அத்தனை பேரும் ஏற்கனவே மக்களின் முழுமையான ஆதரவையும், நம்பிக்கையையும் இழந்து விட்டனர்.
மக்கள் விரும்பாத ஆட்சி
எனவே இவர்கள் மக்களுக்காக பணியாற்ற முன்னுரிமை தருவார்களா அல்லது மக்கள் பணியாற்றுவார்களா என்பதும் கூட பெரும் சந்தேகத்துக்குரியதே. மொத்தத்தில் மக்களுக்கும், மக்களின் உணர்வுக்களுக்கும் சற்றும் சம்பந்தமே இல்லாத, மக்கள் விரும்பாத ஒரு ஆட்சி அரியணையில் அமரப் போகிறது. இது எந்த அளவுக்கு மக்களுக்கு பரலன் தரப் போகிறது என்பதுதான் கேள்விக்குரியதாக உள்ளது.