சசி பேனர் கிழிக்கப்பட்டதால் நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகம்... விழுப்புரத்தில் அட்டூழியம்!
விழுப்புரம் அருகே சசிகலாவின் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது ஆதவாளர்கள் குடிநீர் விநியோகத்தை நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றதை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சசி ஆதரவாளர்கள் குடிநீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த நிதிமூழ்கியனூர் கிராமத்தில் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றதை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர். அதனை சிலர் கிழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சசியின் ஆதரவாளர்கள் கிராமத்துக்கான குடிநீர் சேவையை நிறுத்தியுள்ளனர். சசி ஆதவாளர்களின் நடவடிக்கையால் கொதித்த கிராம மக்கள் அப்பகுதி ஒன்றிய ஆணையரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆணையர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார். மேலும் சசியின் ஆதரவாளர்களிடம் பேனர் கிழிக்கப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளியுங்கள். மாறாக பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரை நிறுத்தாதீர்கள் எனக் கேட்டுகொண்டார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றதற்கே அவரது ஆதரவாளர்களின் அட்டூழியம் அதிகரித்து விட்டதாக கூறியுள்ள கிராம மக்கள், சசிகலா முதல்வரானால் மக்கள் நிலைமை என்னவாகுமோ என அச்சம் தெரிவித்துள்ளனர்.