ஜெ. சமாதியில் ஓங்கி ஓங்கி 3 முறை அடித்து வெறித்தனமாக சசிகலா சபதம் போட்ட நாள் இன்று- மறக்க முடியுமா!
ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடிச்சு அவர் போட்ட சபதத்தை மறக்க முடியுமா?.
சென்னை: ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடிச்சு சபதம் போட்ட நாள் இன்றுதான். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா டயலாக்குடன் மீம்ஸ்கள் பறந்ததை மறக்க முடியுமா?.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பெற்ற சசிகலா ஆட்சியை பிடிக்கவும் கடும் போராட்டத்தை சந்தித்தார். அவசரமாக தேர்வு செய்யப்பட்ட அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நிர்பந்தம் செய்து அவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார். சசிகலாவை சட்டசபை உறுப்பினர்களின் குழு தலைவராக தேர்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா போல் நடை, உடை, பாவனையை மாற்றி கொண்டார் சசிகலா. பின்னர் ஜெயலலிதா வகித்து வந்த முதல்வர் பதவியை வகிக்க வேண்டும் என்பதற்காகவே தனது ஆதரவாளர்கள் விலை போய் விடாமல் இருப்பதற்காக கூவத்தூரில் "சிறைப்பிடித்தார்".
ஆளுநர் இழுத்தடிப்பு
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் அந்த தீர்ப்பு வரும் வரை பொறுமை காக்குமாறு சசிகலாவுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும் பதவி ஆசையால் ஆளுநருக்காக காத்திருந்தார். ஆளுநர் மும்பையிலிருந்து சென்னைக்கு வராமல் இருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
கனவு பொய்த்தது
இதையடுத்து சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்தது. சசிகலா உள்ளிட்டோர் சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஆண்டு இன்றைய தினம் அவர் பெங்களூர் சிறையில் சரணடைய திட்டமிட்டிருந்தார்.
சசியின் சபதம்
இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி சசிகலா பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். அங்கு சமாதியில் ஏதோ முணுமுணுத்தபடியே மூன்று முறை ஓங்கி அடித்தார்.
மீம்ஸ்கள் ஏராளம்
சசிகலா சிறை செல்வதை கொண்டாட்டமாக கொண்டாடிய நெட்டிசன்கள், ஜெ.சமாதியில் அவர் ஓங்கி அடித்ததை விட்டு விடுவார்களா என்ன. சூர்யாவின் சிங்கம் படத்தில் வரும் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா என்ற டயலாக்கை வைத்து மீம்ஸ்களை ரெடி செய்தனர். இன்னும் சிலரோ சசிகலாவின் கைக்கு கீழ் ஓபிஎஸ் படத்தை போட்டு அவர் தலையில் அடிப்பது போலும் மீம்ஸ்கள் பறந்தன. சசிகலா பெங்களூர் சிறை செல்வதை ஒரு பண்டிகை போல் கொண்டாடியதைதான் மறக்க முடியுமா. இல்லை யாரும் எதிர்பாராத வேளையில் ஜெ.சமாதியில் அவர் ஓங்கி அடித்ததைதான் அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா.