சசிபெருமாள் வீட்டில் மின்இணைப்பு துண்டிக்க முயற்சி?.. ஊழியர்களை உறவினர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
சேலம்: மதுவிலக்கு போராட்டத்தில் இறந்த காந்தியவாதி சசிபெருமாள் வீட்டின் மின் இணைப்பை துண்டிக்க முயற்சிப்பதாக கூறி உறவினர்கள், ஊழியர்களை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலத்தை அடுத்த இளம்பிள்ளையை சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். இவர் கடந்த மாதம் 31 ஆம்தேதி குமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது இறந்தார்.
இந்நிலையில் இளம்பிள்ளை கே.கே.நகர் மின்வாரிய அலுவலக ஊழியர்கள் சிலர், மதியம் சசிபெருமாள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் சசிபெருமாள் மனைவி மகிழத்திடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் சசி பெருமாள் வீட்டின் மின் இணைப்பை துண்டிக்க வந்ததாக கூறி, மின்வாரிய ஊழியர்களை அவரது உறவினர்கள் சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. மகுடஞ்சாவடி போலீசார் வந்து உறவினர்களை சமாதானப்படுத்தி ஊழியர்களை விடுவித்தனர்.
இதுகுறித்து சசிபெருமாளின் தம்பி செல்வம் கூறியதாவது... சசிபெருமாள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மின் கம்பம் ஒன்று இருந்தது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த கம்பத்தை அங்கிருந்து அகற்ற கோரிக்கை வைத்தோம். அவர்கள் கம்பத்தை பிடுங்கி, சில அடி தூரத்தில் போட்டுவிட்டு சென்றனர்.
தற்போது அந்த கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை காரணம் காட்டி, இரண்டு இணைப்புகளையும் துண்டிக்க முயல்கின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது. இதற்காக சசி பெருமாள், மனைவியிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பேசிய மின்வாரிய அதிகாரிகள், சசிபெருமாள் நிலத்தில் பிடுங்கி போடப்பட்ட மின் கம்பத்தை அப்புறப்படுத்த ஊழியர்கள் சென்றதாகவும், இதற்காக அவரது மனைவியிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.