கேட்பதற்கு ஆளே இல்லை என்றாலும் அசராமல் பேசும் தா.பா
சென்னை: மோடி பிரதமரானால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்று விஜயகாந்த் கூறுவது நகைப்புக்குறியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
அதிமுக, திமுக போல பிரம்மாண்ட மேடை இல்லாவிட்டாலும், தேமுதிக, மதிமுக, பாமக போல கொஞ்சம் கெத்தான வேனில், திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தாலாவது கொஞ்சம் நின்று கேட்க ஆள் வருவார்கள்.
ஆனால் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நட்சத்திரப் பேச்சாளர்களை நம்பாமல் தாங்களாகவே களத்தில் இறங்கி மக்களை சந்தித்து வருகின்றனர்.
அவர்கள் பிரசாரத்திற்கு தேர்வு செய்வது நட்ட நடு மத்தியான நேரத்தில்தான் அதுவும் டாடா ஏஸ் வேனில் ஒரு ரேடியோவை கட்டி அசராமல் பேசுகிறார் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். ஆனால் கேட்கத்தான் யாருமில்லை.
வறட்சியில் இந்தியா
இந்திய அரசின் வருமானம் ரூ.500 கோடிக்கு குறைவாக இருந்த காலத்தில் நாடெங்கும் அணைகள், தொழிற்சாலைகள் என பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றது. ஆனால் இன்று ரூ.16 லட்சம் கோடி வருமானம் இருந்தும் கூட வறட்சியை சமாளிக்க முடியாமல் இருக்கும் நிலையே இருந்து வருகிறது.
நதிகள் இணைப்பு
நமது நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பே நதிகளை இணைக்கும் திட்டத்தை தயார்படுத்தி அதற்கான செலவையும் முறைப்படுத்தி விஞ்ஞானிகள் அரசாங்கத்திடம் அறிக்கை அளித்தனர். ஆனால் அதை செயல்படுத்தகூடிய நல்ல மனம் படைத்த அரசு இதுவரை அமையவில்லை.
தன்மானம் இழந்துவிட்டனர்
இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் திரைக்கு பின்னால் இருந்து மோடியை முன் நிறுத்தி உள்ளனர். இவர்களிடம் தமிழகத்தின் புதிய பக்தர்களான பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர்கள் தன்மானம், சுயமரியாதை என அனைத்தையும் இழந்து மயங்கி சென்றுள்ள ம.தி.மு.க. தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.வால் தமிழகத்திற்கு அவமானம் என்று கூறினார்.
மதுக்கடைகளை மூடுவாரா?
மோடியை பிரதமராக்க பிரசாரம் செய்யும் விஜயகாந்த், தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடுப் போவதாக கூறுகிறார். உடனே, இல.கணேசன், ஏய் போட்டுட்டு பேசுறியா? போடாம பேசுறியா? குஜராத் தவிர பாஜக ஆட்சி செய்யிற எல்லா மாநிலங்களிலும் மதுக்கடை இருக்கு என்று கூறியபின்னர் அன்றிலிருந்து அதை கூறுவதில்லை என்றார்.
நல்லக்கண்ணு பிரசாரம்
திண்டுக்கல் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, ''நாட்டில், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு குடிநீர் பிரச்னை, ஏழைகளுக்கு வீடு இல்லாத பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் உள்ளது என்றார்.
ராமர் கோவில் கட்டுவதா?
பாரதிய ஜனதா கட்சி அதைப் பற்றி எல்லாம் கவலைக்கொள்ளாமல் ராமர் கோவிலை மீண்டும் கட்டுவோம் என்பது வேதனையளிக்கிறது. மேலும், பாரதிய ஜனதாவிற்கு ஆதரவளித்துள்ள தமிழக கட்சிகள் இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.