'பிளாஷ்பேக்': அதிரடியாக முதல்வரான ஜெ.. செல்லாது என்று தூக்கி வீசிய சுப்ரீம் கோர்ட்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா அதிரடியாக முதல்வரானார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை விட முக்கியமாக, பல்வேறு சட்ட சிக்கல்கள் இருந்தபோதிலும், ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் பாத்திமா பீவி சம்மதித்ததுதான் சலசலப்பை ஏற்படுத்தியது.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதிரடியாக முதல்வரான ஜெயலலிதா
தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில், 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முக்கியமான வழக்கின் அப்பீல் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், ஜெயலலிதாவை முதல்வராக்கியது அதிமுக எம்.எல்.ஏக்கள் குழு. அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியும் ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வழக்குப் போட்ட வக்கீல் செல்வராஜ்
இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டான்சி வழக்கிலும், அதற்கு முன்பு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் செல்வராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்தார்.
வழக்கில் இணைந்த திமுக - சாமி
செல்வராஜுடன், திமுக தரப்பும், சுப்பிரமணியம் சாமி உள்ளிட்ட மேலும் 5 பேரும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி மனு செய்தனர். அதை உச்சநீதிமன்றம் ஏற்றது. 6 மனுக்களையும் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு எடுத்தது.
உச்சநீதிமன்றம் சரமாரி விளாசல்
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச், ஊழல் குற்ற வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றவரை எப்படி முதல்வராக்கலாம், இது சட்டப்படி செல்லுமா என்று சரமாரியாக கேள்விகளைக் கேட்டது.
ஜெ.வை தகுதி நீக்கம் செய்தால்...
ஜெயலலிதா முதல்வரானது சட்டப்படி செல்லாது, சட்டவிரோதம் என்று அறிவித்தால் என்ன மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும் என்றும் மத்திய அரசிடம் அது வினவியது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
டிஸ்மிஸ் செய்யலாம்
அதற்கு மத்திய அரசுத் தரப்பில் ஜெயலலிதா தானாக பதவி விலக முன்வராவிட்டால் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
பதவியைப் பறிக்க உத்தரவு
இதன் பின்னர் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு: கிரிமினல் வழக்கில் சிறை தண்டைன பெற்ற ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றது தவறு. அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதனால் அவரது பதவியைப் பறிக்க உத்தரவிடுகிறோம்.
பதவி ஏற்றதே செல்லாது
அவர் பதவி ஏற்றதே செல்லாது என தீர்ப்பளிக்கிறோம். அரசியல் சட்டத்தின் 164வது பிரிவின் படி எம்.எல்.ஏவாக இல்லாத ஒருவர் முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ நியமிக்கப்படலாம்.
முதல்வராக தகுதி வேண்டும்
ஆனால், அரசியல் சட்டத்தின் 173வது பிரிவு மற்றும் 191வது பிரிவின் கீழ் அவர் அதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும். கிரிமினல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவரோ, அந்த வழக்கில் 2 சிறை தண்டனை பெற்றவரோ முதல்வராக நியமிக்கப்படக் கூடாது.
மக்கள் தீர்ப்பை விட
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பேசும்போது மக்களின் தீர்ப்புத் தான் உயர்ந்தது. அதன் அடிப்படையில் தான் அவர் பதவியேற்றார் என்று கூறினார். அரசியல் சட்டத்துக்கு உகந்ததாக இருந்தால் தான் மக்களின் தீர்ப்பை ஏற்க முடியும் என்று நீதிபதிகள் அதிரடியாக கூறியிருந்தனர்.
ஜெயலலிதாவுக்கு வாதாடிய வேணுகோபால்
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வழக்கறிஞர் வேணுகோபால் வாதாடினார். ஜெயலலிதாவுக்கு எதிராக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி, மூத்த வழக்கறிஞர் நாரிமன் ஆகியோர் வாதாடினர்.
பதவி விலகிய ஜெயலலிதா
இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் பதவி விலகினார் ஜெயலலிதா.
அரசியல் திருப்பம்
அதிமுகவில் முதல்வர் என்றால் , எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மட்டுமே முதல்வராக நினைக்கக் கூடிய நிலை அதுவரை இருந்து வந்தது. ஆனால் முதல் முறையாக இந்த இருவரைத் தவிர்த்த புதிய அதிமுக முதல்வரைக் காணும் அதிசயத்தை தமிழகம் காணும் நிலை ஏற்பட்டது. அரசியலிலும் அது புதிய திருப்புமுனையாக அமைந்தது.