விழுப்புரம்: 3ம் வகுப்பு மாணவி பலாத்காரம்… பள்ளி தாளாளர் கைது
விழுப்புரம்: முன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்த விழுப்புரம் தனியார் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியை உடனே மூடக்கோரி, பெற்றோரும் முஸ்லீம் அமைப்பினரும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கைதான நபரின் பெயர் சிவக்குமார் என்பதாகும். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் குயின் மேரி என்ற தனியார் ஆரம்ப பள்ளியை நடத்தி வருகிறார். இதில் 80 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில், முன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை, கடந்த சனிக்கிழமையன்று சிறப்பு வகுப்பு என்று கூறி தன் அறைக்கு அழைத்து சென்று சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
கடந்த இரு தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சிறுமி திங்கட்கிழமை பள்ளிக்கு செல்ல மறுத்து அழவே பெற்றோர் காரணம் கேட்டுள்ளனர். அப்போது தனது பிறப்புறுப்பில் வலி இருப்பதையும் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறாள். உடனே சிறுமியின் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரணை செய்தனர். அப்போது, தன்னை பள்ளி தாளாளர் பலாத்காரம் செய்த விஷயத்தை அழுது கொண்டே கூறினாள். இதையடுத்து, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பள்ளி தாளாளர் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளி தாளாளரே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளியை உடனே மூடக்கோரி பெற்றோர்களும், முஸ்லீம் அமைப்புகளும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கைது செய்யப்பட்ட சிவக்குமாரின் மனைவியும், புதுவை லாஸ்பேட்டை பகுதியில் ஆரம்ப பள்ளியை ஒன்றை நடத்தி வருகிறாராம்.