கண்டதையும் கொளுத்தாதீங்க.. மாணவர்கள் நடத்திய புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி
புகையில்லா போகி கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு பேரணியை பள்ளி மாணவர்கள் நடத்தினார்கள்.
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் நடத்திய புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை நகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.
பேரணிக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கி புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தேவகோட்டையில் பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, ஜெயம் கொண்டார் தெரு, மு.மா.அள. தெரு, சின்ன மாரியம்மன் கோவில் தெரு, நேரு தெரு, செப்ப வயலார் தெரு, நடராஜபுரம் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு, வைத்தியலிங்கம் தெரு, இரவு சேரி பாதை வழியாக சென்று பள்ளியில் முடிவடைந்தது.

பேரணியில் புகையில்லா போகி விழிப்புணர்வை பொது மக்களிடம் உருவாக்கும் வகையில், பிளாஸ்டிக் மற்றும் டயர்களை எரிக்காதீர், பாலிதீன் பைகளை ஒழிப்போம், குப்பையில்லா நகரம் கோவிலுக்கு சமம், புகை பூமிக்கு பகை, துணிப்பைகளை பயன்படுத்துவோம், துய காற்று பெற மரங்களை நடுவோம், மக்காத குப்பை, மக்கும் குப்பை ஆகியவற்றை விளக்கும் வகையில் பதாகைகளை மாணவர்கள் ஏந்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.

பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். ஏராளமான பொது மக்கள் இதனை பார்த்து புகையில்லா போகி பற்றிய விழிப்புணர்வைப் பெற்றதாக தெரிவித்தார்கள். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.













Click it and Unblock the Notifications