தனியார் பெரும் முதலாளிகள் மண் வளத்தை சுரண்ட அனுமதிப்பதை ஏற்க முடியாது: சீமான் காட்டம்
காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை மத்திய அரசை கைவிடக் கோரியும், காவிரி ஆற்றில் மணல் அள்ளும் தமிழக அரசை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலையில் சுங்கவாயில் அருகேயுள்ள நம்மாழ்வார் திடலில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காவிரி ஆற்றில் அதிகப்படியான மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் அழிந்து வருகின்றது. மேலும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஆற்றில் அரை அங்குலம் எடுக்கப்பட்ட மணல் மீண்டும் உருவாக 100 ஆண்டுகள் ஆகும் என ஆய்வில் கூறப்படுகின்றது. ஆனால் இது பற்றி தமிழக அரசு கவலை கொள்ளவில்லை. மாறாக, தற்போது பல அடி ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை நீடித்தால், வருங்காலத்தில் தண்ணீரின்றி மனிதனை மனிதனே கொன்று ரத்தத்தை குடிக்கும் நிலை உருவாகும். காரணம், தண்ணீர் தற்போது, வர்த்தகப் பொருளாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.
மனிதன் உடலுக்கு தோல் போல் தண்ணீரை தேக்கி வைக்க மணல் முக்கியம். அதிகப்படியாக மணல் அள்ளப்பட்டால், நீர்வளம் முற்றிலும் குறைந்துவிடும்.
தனியார் பெரும் முதலாளிகள் மண்ணின் வளத்தை சுரண்ட அனுமதிப்பதை ஏற்க முடியாது. மண்வளம் மக்களுக்கானதே தவிர தனி முதலாளிகளுக்கு அல்ல. இப்போராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும் என்றார்.