வெளிநாட்டு டூர்... விருது எல்லாம் இருக்கட்டும்... சுத்தமான நீரும், கழிவறையும் வேண்டும் அமைச்சரே!
அரசு பள்ளிகளில் சுத்தமான நீரும், அவர்களுக்கு சுகாதாரமான கழிவறையும் ஏற்படுத்தி தர அரசு முன்வரவேண்டும்.
Recommended Video

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர்கள் குடிப்பதற்கு சுத்தமான நீரும், அவர்களுக்கு சுகாதாரமான கழிவறையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து, மேலைநாடுகளின் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஜப்பான், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அறிவியல், கலை, தொழில்நுட்ப அறிவை பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் இந்த கல்வி பயணத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
பாராட்டு சான்றிதழ்
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ 10,000, ரூ 20,000 மற்றும் பாராட்டு சான்றிதலும் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இலவச லேப் டாப்
நீட் தேர்வுக்காக சென்னையில் 4 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்காக ஜனவரி 15க்குள் அனைத்து பயிற்சி மையங்களிலும் பயிற்சி அளிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். லேப்டாப் கிடைக்காத பிளஸ் 2 மாணவர்களுக்கு, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மாணவர்களுக்காக ஒரு லட்சம் லேப்டாப் வழங்குவதற்கு முதல்வர், துணை முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார்.

ரூ. 1.43 கோடி ஒதுக்கீடு
தமிழ் வழியில் பயின்று பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பில் 15 மாணவர்கள், 12ம் வகுப்பில் 15 மாணவர்கள் என 32 மாவட்ட மாணவர்களுக்கு என 960 சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளன்று காமராஜர் விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் ரூ.1.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

மாணவிகள் தவிப்பு
தமிழகத்தில் பல அரசுப்பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. சுகாதாரமான கழிவறை வசதியின்றி மாணவிகள் தவித்து வருகின்றனர். அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி விட்டு விருதுகளும், வெளிநாட்டு கல்வி சுற்றுலாவும் அழைத்துச் செல்லலாம் என்பது கல்வியாளர்களின் கருத்து.

சத்துணவு சரியில்லையே
பல பள்ளிகளில் சத்துணவு என்ற பெயரில் புழு நெளியும் உணவு தரப்படுகிறது. பள்ளிக்கட்டிடங்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற அளவிற்கு பல ஊர்களில் அச்சத்துடனேனே மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சில மாணவர்களை மட்டும் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதால் மட்டும் கல்வித்தரம் உயர்ந்து விடுமா என்று கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?












Click it and Unblock the Notifications