நாடாளுமன்ற இருக்கையில் சீட் பெல்ட் தேடினாராம் மோடி.. சீதாராம் யெச்சூரி கிண்டல்
மதுரை: நாடாளுமன்ற இருக்கையையும், விமான சீட் என நினைத்து, விமானத்தில் சீட் பெல்டை பெல்ட்டை தேடுவது போல இங்கு அமர்ந்தபோதும் சீட் பெல்ட்டை தேடினாராம் என்று ஒரு நகைச்சுவை உலவுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேலி செய்தார்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சீதாராம் யெச்சூரி, மோடி பற்றி கேலியாக உலவும் காமெடிகளை எடுத்து விட்டார்.
யெச்சூரி கூறுகையில், "நரேந்திரமோடி இப்போதுதான் அதிக நாட்கள் இந்தியாவில் இருந்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 38 முறை வெளிநாட்டு பயணம் சென்றுள்ளார். அவரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பல்வேறு நகைச்சுவைகள் உலா வருகின்றன.
ஒரு முறை லண்டன் சென்றுவிட்டு மோடி சோர்வாக நாடாளுமன்ற இருக்கையில் வந்து அமர்ந்தாராம். நாடாளுமன்ற இருக்கையையும், விமான சீட் என நினைத்து, விமானத்தில் சீட் பெல்டை பெல்ட்டை தேடுவது போல இங்கு அமர்ந்தபோதும் சீட் பெல்ட்டை தேடினாராம் என்று ஒரு நகைச்சுவை உலவுகிறது.
அதேபோல, ஒருமுறை மோடி லண்டன் சென்றபோது ஒரு துணை அமைச்சர் மோடியை விமானநிலையத்தில் வரவேற்றாராம். எங்கள் நாட்டின் பிரதமர் கேமரூன் உங்களைச் சந்திக்க தயாராக உள்ளார் என்று அவர் கூறினாராம்.
நம்முடைய பிரதமர் மோடிக்கோ, கேமரூன் என்பது, 'கேமரா ஆன்' என்று கேட்டதாகவும், உடனடியாக தலைமுடியை சரிசெய்து கோட்டை இழுத்துவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்க தயாராகி விட்டாராம். இப்படி பல நகைச்சுவையை உற்பத்தி செய்வதற்கு பிரதமர் மோடி உதவியாக இருக்கிறார்" என்று யெச்சூரி பேசினார்.