அரிவாளை வைத்து கேக் வெட்டும் நிலையில் தமிழகம்.. தமிழிசை செளந்தரராஜன்
அரிவாளை வைத்து கேக் வெட்டும் நிலையில் தமிழகம் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக தமிழிசை குறிப்பிட்டு உள்ளார்.
திருச்சி: ரவுடிகள் அரிவாளை வைத்து கேக் வெட்டும் நிலையில் தமிழகம் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
திருச்சியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திருச்சி வந்துள்ளார்.
இந்தக்கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். முன்னதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, பிரதமரின் கருத்துக்கு காங்கிரஸ் ஆற்றிவரும் எதிர்வினை சரியானது அல்ல; அதன் உச்ச கட்டமாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பக்கோடா விற்பது போல நடந்துகொண்டது முறையற்ற செயல் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், சுயதொழில் செய்வது எப்போதும் கேலிக்குரியது அல்ல. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, செய்ய வேண்டியதை சிறப்பாக செய்து இருந்தால் தற்போது இந்த நிலை நமது நாட்டிற்கு வந்து இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இத்தனை நாட்களாக இவர்களை ஏன் வெளியில் விட்டு வைத்து இருந்தார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரம் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு ரவுடிகள் அரிவாள் பயன்படுத்தும் நிலையில் தமிழகத்தில் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.