சிவகாசி பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி; இருவர் மீது வழக்குப் பதிவு
சிவகாசி: சிவகாசியில் இன்று பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த ஸ்கேன் சென்டருக்கு வந்த 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் செண்பகராமன், கடைக்கு உரிமம் பெற்றிருந்த ஆனந்தராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக் கிடங்கில் இருந்து வெளியூர்களுக்கு பட்டாசு பெட்டிகள் அனுப்புவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே அந்த கிடங்கில் இருந்து பட்டாசுகளை மினி ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டிருந்த போது தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 20 பேர் பட்டாசு கிடங்கில் சிக்கினர்.

பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதை அடுத்து கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். கிடங்கில் இருந்து பட்டாசு ஏற்றப்பட்ட சரக்கு லாரி முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. தீ மளமளவென அருகில் உள்ள ஸ்கேன் சென்டருக்கும் பரவியது. இதனால் அங்கிருந்த 30க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் ஸ்கேன் சென்டரின் பின்பக்க ஜன்னலை உடைத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 9 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு கடை உரிமையாளர் செண்பகராமன், கடைக்கு உரிமம் பெற்றிருந்த ஆனந்தராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம், மாவட்ட எஸ்.பி ராஜராஜன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications