தேமுதிக நகர செயலாளர் சரவணன் கொலை வழக்கில் நான்கு பேர் சரண் - 6 பேர் தலைமறைவு
காஞ்சிபுரம் தேமுதிக நகர செயலாளர் சரவணன் கொலை வழக்கில் நான்கு பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
வேலூர்: தேமுதிக நகர செயலாளர் சரவணண் கொலை வழக்கில் பாலிமேடு பகுதியை சேர்ந்த பிரபாகர் , கோகுல் , கார்த்தி , காக்கா சுரேஷ் ஆகிய நால்வர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு செங்கல்வராயன் ஒத்தைவாடை தெருவில் சரவணன் வயது 38 என்பவர் வாடகை வீட்டில் தன் குடும்பத்துடன் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். இவர் தேமுதிக கட்சியின் தலைமை கழக பேச்சாளராகவும் கட்சியின் நகர துணை செயலாளருமாக இருந்து வந்தார்.
சரவணனுக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். கட்சி பணியுடன் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்து வந்தார் சரவணன். நேற்று இரவு சுமார் 10.15மணியளவில் இவர் வீட்டு அருகே உள்ள பகுதியில் தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து பைக்கை நிறுத்தியுள்ளார்
அப்போது அங்கே மறைந்திருந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டை வாசலில் வைத்து சரவணனை மடக்கி வெட்டியது. அதிரச்சி அடைந்த சரவணன் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். சாலையில் தப்பி ஓட முயன்றவரை விடாமல் விரட்டி விரட்டி வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதில் சரவணன் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து சரவணனை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவ காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏஎஸ்பி ஸ்ரீநாதா நேரில் வந்து கொலையுண்ட இடத்தை ஆய்வு செய்தார். மேலும் காவல்துறை மோப்ப நாய் அஜய், கைரேகை டிஎஸ்பி சங்கர், தடவியல் டிஎஸ்பி விஜயலட்சுமி ஆகியோர் தடயங்களை சேகரித்தனர்.
தேமுதிக பிரமுகர் சரவணன் கொலை சம்பவம் ரியல் எஸ்டேட் போட்டியால் நடைபெற்றதா? கட்சி பதவிக்காக நடைபெற்றதா? உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதால் கொலை நடந்ததா என்றும் தனிப்படை விசாரணை மேற்கொண்டனர்.
தேமுதிக நகர செயளாலர் சரவணண் கொலை வழக்கில் 10 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. அதில் பாலிமேடு பகுதியை சேர்ந்த பிரபாகர் , கோகுல் , கார்த்தி , காக்கா சுரேஷ் ஆகிய நால்வர் காட்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மாவட்ட தனிப்படை மற்றும் ஏஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து மீதம் உள்ள 6 நபர்களை தேடி வருகின்றனர்.