கொடநாடு எஸ்டேட்டின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை.. மன உளைச்சல் காரணமா?
கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் மரணத்தின் பின்னணியில் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து ஆட்சி, கட்சியை கைப்பற்ற நினைத்தார் சசிகலா. இதனைத்தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பின்னர் அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அச்சின்னத்தை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் டெல்லி புரோக்கர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயற்சித்தார். இதனால் தினகரனை போலீஸார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் கொடநாடு பங்களாவில் கடந்த ஏப்ரல் கொள்ளை நடந்தது. அப்போது காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார். அதேபோல பாலக்காடு அருகில் விபத்தில் சிக்கிய கனகராஜின் நண்பர் சயானும் படுகாயமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல போலீசுக்கும் தெரியாமல் இந்த வழக்கில் அதிமுக்கிய நபர் ஒருவரின் கரம் இருக்கிறது என்றும், அவர்தான் கொடநாடு சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிமுகவினர் கொதிக்கிறார்கள்.
இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக கோத்தகிரியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். எஸ்டேட் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கம்ப்யூட்டர் மூலமாக இவர் நிர்வாகித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள தனது வீட்டில் இன்று மாலை தினேஷ்குமார் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, தற்கொலை, விபத்து போன்ற சம்பவங்களால் உயிரிழப்பு ஏற்படுவது எஸ்டேட் தொடர்பாக ஏதோ மர்மம் இருப்பதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த சம்பத்தின் பின்னணி என்ன என்பது பற்றி தெரியவரும்.












Click it and Unblock the Notifications