கையில் கரகம் ஏந்தி.. மஞ்சள் சேலையுடன் மழை வேண்டி பெண்கள் பாலாபிஷேகம்.. காவல் தெய்வங்களுக்கு!
மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜை, மற்றும் வழிபாடுகளை நடத்தினர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து கிராம காவல் தெய்வங்கங்களுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுப்பபட்டனர்,
கிருஷ்ணகிரி அருகே பூசாரிப்பட்டி, கெட்டுக் கொல்லை, கண்ணியப்பன் நகர், சின்னப் பையன் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
மழை இல்லை
இந்த கிராமங்களில் கடந்த பல மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாகுபடி செய்யப்பட்ட மானாவரி பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கின்றன. தங்களின் விவசாய நிலங்களை நம்பியே இந்த கிராம மக்கள் உள்ளனர்.
தெய்வ குத்தமா?
மழை இன்றி விவசாயம் செழிக்கவில்லை, என்பதால் இதற்கு தெய்வகுத்தம் ஏதாவது காரணமாக இருக்குமோ என அச்சப்பட்டனர். அதனால் மேற்கண்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி காவல் தெய்வங்களாக வலம் வரும் காளியம்மன், பென்னியம் உள்ளிட்ட பல்வேறு காவல் தெய்வங்களை குளிர்விக்க பாலாபிஷேகம் செய்து வழிபட முடிவு செய்தனர்.
பாலாபிஷேகம்
அதன்படி இன்று, ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் மஞ்சள் புடவைகள் அணிந்து, அம்மன் கரகத்தை தலையில் சுமந்தவாறு, மேள தாளங்களுடன் பால்குடம் ஏந்தி ஊர்வமாக வலம் வந்தனர், பின்னர் ஒவ்வொரு கிராமத்தில் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கும் மாரியம்மன், பூங்காவனத்து அம்மன், பட்டாளம்மன், காளியம்மன் புத்துமாரிம்மன் உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்து மழை வேண்டி வழிபட்டனர்.
கிராம தெய்வங்கள்
பின்னர் தெய்வ குற்றம் நீங்கி நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள். மற்றும் அலங்காரப் பூஜைகளும் நடைப்பெற்றன. மழை வேண்டி நடைபெற்ற இந்த வினோத பூஜையின்போது ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு கிராம தெய்வங்களை மழை பெய்ய வேண்டி வழிப்பட்டனர்.