பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு “ஸ்காலர்ஷிப்”
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைப்பள்ளி பயில்வதற்கான உதவித்திட்டம் வழங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் புதன்கிழமை வெளியான செய்திகுறிப்பில், "ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர் என மொத்தம் 10 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்புகின்ற, தமிழகத்தில் உள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற ஏதுவாக அரசால் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்தத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு அதிகப்பட்சமாக ஆண்டொன்றிற்கு ரூபாய் 28 ஆயிரம் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 58 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
எனவே தகுதியுடைய மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.