ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: குஷ்புவை வைத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போடும் கணக்கு
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு வேட்பாளரை திமுக அறிவித்துவிட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்த இடைத் தேர்தலில் களமிறங்கலாமா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடலாமா என்று தமிழக காங்கிரஸ் கட்சி ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆலோசனைக்கு நடுவே காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்புவை களம்இறக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைவர் இளங்கோவனிடம் தெரிவித்துள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக அரியணை ஏறினார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த கையோடு எம்.எல்.ஏ பதவியையும் பறிகொடுத்தார்.
இதனையடுத்து காலியாக உள்ள அந்த தொகுதிக்கு பிப்ரவரி 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் போட்டி
இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பாக காங்கிரஸ் கட்சி தனித்து களமிறங்கும் என்று கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

திமுகவிற்கு ஆதரவா?
இந்த இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிக்கலாம் என்றும், தி.மு.க., வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது' என சிலர், இளங்கோவனை வலியுறுத்தி வருகின்றனர்.

குஷ்புவை களமிறக்கலாம்
நடிகை குஷ்புவை களம்இறக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைவர் இளங்கோவனிடம் கூறிவருகின்றனர். குஷ்பு தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில், கட்சி குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு ஓட்டுகளை பெறும் என, நம்புகின்றனர்.

சத்தியமூர்த்தி பவனில்
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று இளங்கோவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் யசோதா, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பா.சிதம்பரம்
தங்கபாலு, ப.சிதம்பரம் உள்ளிட்ட கோஷ்டி தலைவர்களிடமும் இளங்கோவன், தொலைபேசி மூலமாக, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அவர்களும் தங்களின் பங்குக்கு கூறியுள்ளனர்.

இப்பதான் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொன்ன ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இடைத்தேர்தலில், போட்டியிடலாமா என்பது குறித்து, ஆலோசனை நடத்தியிருக்கிறோம் என்றார்.

தங்கபாலு வரலையே
தனித்து போட்டியிடுமா? கூட்டணியா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளங்கோவன், தனித்து போட்டியிடுவதா?வேறு கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா? அல்லது போட்டியிடாமல் விடுவதா? பொது வேட்பாளருக்கான முயற்சி எடுப்பதா? என, பல விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறோம். பா.சிதம்பரம், தங்கபாலு ஆகியோரிடமும் கருத்து கேட்டுள்ளோம். அதை, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்துவோம். மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார்.

பிரசாரத்திற்கு குஷ்பு
குஷ்புவை வேட்பாளராக காங்கிரஸ் களமிறக்குமா? அல்லது பிரசாரத்திற்கு மட்டும் குஷ்பு செல்வரா? அல்லது இடைத்தேர்தலில் தனித்து களமிறங்காமல் திமுகவிற்கு ஆதரவளிக்குமா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications