இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் குடமுழுக்கு - பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு தீவிரம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி திருத்தலத்தின் இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம் இன்று 18ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளது.
108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான தலமாகத் திகழ்கிறது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோயில்.
சயனிக்கும் ரங்க நாதர்:
காவிரி, கொள்ளிடத்துக்கு நடுவே தண்ணீர் சூழ்ந்த பகுதியில் சயனித்தபடி, அகிலம் முழுவதையும் அருள்பாலித்துக் காக்கும் ஸ்ரீரங்கநாதரைத் தரிசிக்க, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
முதல்கட்ட கும்பாபிஷேகம்:
ஊரில் பாதி அளவுக்கு பிரமாண்டமாகத் திகழும் ஸ்ரீரங்கம் கோயிலின் கும்பாபிஷேகம் இரண்டு கட்டமாகப் பிரிக்கப்பட்டு ஏற்கெனவே முதல்கட்டமாக சிறப்புற நடந்தது.
இரண்டாம் கட்ட ஏற்பாடுகள்:
இந்த நிலையில் இரண்டாம் கட்ட மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பணிகள் மளமளவென நடந்தன.கடந்த மாதத்தில் கும்பாபிஷேகம் வைப்பதாக இருந்தது.
நாளை குடமுழுக்கு:
பிறகு நவம்பர் 9 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால் அதுவும் கைவிடப்பட்டது. அதையடுத்து இன்றைய தினம் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
யாக பூஜைகள் மும்முரம்:
இதையொட்டி கடந்த 4 நாட்களாக யாக சாலை பூஜைகள் சிறப்புற நடைபெற்று வருகின்றன. நேற்று காலை ஆறாம் கால யாகபூஜை நடைபெற்றது. மாலையில் ஏழாம் காலை யாக பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகள் தீவிரம்:
இன்று புதன்கிழமை காலை 8.45 மணி முதல் 10 மணிக்குள் மகா சம்ப்ரோஷணம் நடைபெறுகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள். எனவே, அந்த பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.