பிரிட்டனின் 5 செயற்கைக்கோள்களுடன் இன்று இரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி28 ராக்கெட்...
சென்னை: பூமியின் இயற்கை வளங்களை ஆய்வு செய்யவும், பேரிடர்களைக் கண்காணிக்கவும் பிரிட்டனின் செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி28 ராக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து இரவு 9.58 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 62 மணி நேரம் 30 நிமிட கவுன்ட் டவுன் புதன்கிழமை காலை 7.28 மணிக்குத் தொடங்கியது.
இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் எந்த தடையும் இன்றி நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட்டில் நான்காவது மற்றும், இரண்டாவது நிலைகளில் எரிபொருளை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தச் செயற்கைக்கோள்கள் பூமியைப் மிக நுட்பமாக கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகின்றன. இவற்றின் மூலம் பூமியில் எந்த ஒரு இடத்தையும் அனைத்து நாட்களிலும் படம் பிடிக்க முடியும்.
பூமியில் உள்ள வளங்களைக் கண்டறியவும், சுற்றுச்சூழல், நகர்ப்புற மேம்பாடு, பேரிடர் மேலாண்மைக்காகவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இவற்றின் ஆயுட் காலம் 7 ஆண்டுகளாகும்.