அழகிரிக்குப் போட்டியாக நடந்த ஸ்டாலின் 'திருவிழா'.. ஜெ.வுக்கு சவால் விட்ட ஸ்டாலின்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி நேற்று மதுரையே குலுங்கியது. அதேசமயத்தில், சென்னை மயிலை மாங்கொல்லையில் மு.க.ஸ்டாலின் ஒரு கூட்டம் போட்டு தனது ஆதரவைக் காட்டினார். கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால் விட்டும் பேசினார்.
திமுக மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டமாக இது நடந்தது. ஸ்டாலின் திருவிழா என்று இதை திமுகவினர் ஏற்கனவே வர்ணித்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். ஸ்டாலினுக்கும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது...
அதிமுக ஆட்சியால் துயரத்தில் மக்கள்
அதிமுக அரசின் நிர்வாகச்சீர்கேடுகளால் மக்கள் எண்ணற்ற துயரங்களை சந்தித்து வருகின்றனர். அரசே குடிநீரை விற்கும் செயல் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது.
ஜெ. பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாமா...
ஆளுநர் உரைக்கு பின் 3 நாள் மட்டுமே அவை நடைபெறும் என அறிவித்திருப்பது வியப்பளிக்கிறது. பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதா?.
சட்டசபையில் பேச விட மாட்டார்களே...
தமிழகத்திலிருந்து 12 ஆயிரம் கோடி முதலீடுகள் கர்நாடகம் செல்ல காரணம் ஜெயலலிதா. இது குறித்து சட்டமன்றத்தில் பேச நிச்சயம் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள்.
திராணியிருந்தால் ஜெயலலிதா பதிலளிக்கட்டும்
ஆனால் செய்தித்தாள்களை படித்துவிட்டு, தெம்பிருந்தால், திராணியிருந்தால், தைரியமிருந்தால் ஜெயலலிதா பதில் சொல்லட்டும் என்றார் ஆவேசமாக.