ரகசிய வாக்கெடுப்பு தான் ஜனநாயகத்தை காப்பாற்றும்- ஸ்டாலின்; சபாநாயகர் நிராகரிப்பு
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதனை சபாநாயகர் நிராகரித்தார்.
சென்னை: சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். சபை கூடியதும், எதற்காக அது கூட்டப்பட்டுள்ளது என்பதை சபாநாயகர் தனபால் அறிவித்தார். பின்னர் பெரும் அமளிக்கிடைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினார். இத்தனை அவசரமாக ஏன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் பேசினார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே ஜனநாயகத்திற்கு வழி வகுக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். எனினும் ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.