திராணியிருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவி விலகட்டும் - ஸ்டாலின்
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய முதல்வர், அமைச்சர்கள் தங்களில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய முதல்வர், அமைச்சர்கள் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபை கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூவத்தூர் பண பேர விவகாரம் 3 நாட்கள் புயலை கிளப்பியது.
இதன்பின்னர் இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் சட்டசபை இன்று கூடியது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
கேள்வி நேரம் முடிந்த பின்னர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
திமுகவினர் அமளி
அப்போது சட்டசபையில் ஸ்டாலினை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. இதனால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
சராமரி கேள்வி
இதன் பின்னர் ஸ்டாலினுக்கு அனுமதியளிக்கப்பட்டது, அப்போது பேசிய அவர் ஆர்.கே.நகர் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? . தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்து வழக்கு பதியாதது ஏன்?காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மீதே வழக்கு காவல்துறை எப்படி விசாரணை நடத்தும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திமுகவினர் வெளிநடப்பு
இதனைதொடர்ந்து ஸ்டாலினின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் , ஆர்.கே.நகர் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
வழக்குப் பதிவு
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபையில் நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் அளித்த பதிலில் திருப்தியில்லை. திமுகவினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமே முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்து செய்துள்ளது.
திராணி இருந்தால் ராஜினாமா செய்யட்டும்
காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் பதவியில் இருந்தால் அவர் மீது நேர்மையான விசாரணை நடைபெறாது. எனவே தெம்பு இருந்தால், திராணி இருந்தால் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதே போல அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
கூட்டுச்சதி
ஆளுங்கட்சியினருடன் தமிழக தேர்தல் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து சதி செய்து தவறை மூடி மறைக்க முயற்சி செய்வதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் சற்றே முடிந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் சட்டசபையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.