எம்எல்ஏ சரவணன் வீடியோ பற்றி ஆளுநரிடம் முறையிடுவோம்- ஸ்டாலின்
எம்எல்ஏ சரவணன் வீடியோ பற்றி ஆளுநரிடம் முறையிட உள்ளதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். எம்எல்ஏ சரவணன் வீடியோ பற்றி ஆளுநரிடம் முறையிட உள்ளதாகவும், அதற்கு நேரம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்தது குறித்து எம்எல்ஏ அளித்த பேட்டி பற்றி விவாதிக்க அனுமதி மறுத்ததால் திமுக இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரச பெரும்பான்மையை நிரூபிக்க பணம் பேரம் பேசப்பட்டதாக
அதிமுக எம்எல்ஏ சரவணன், கனகராஜ் இதனை வெளிப்படையாக பேட்டி தந்துள்ளனர் என்றார்.
ஆங்கில தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ள பேட்டி குறித்து சட்டசபையில் அந்த எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது. நேற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்திய போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டோம்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தலைமைச் செயலகம் எதிரே நேற்று மறியலில் ஈடுபட்டோம். எங்களுடன் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினரும் போராட்டம் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டு ராயப்பேட்டையில் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டோம்.
வெளியேற்றப்பட்டாலும் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்துவோம் என்று சொன்னதன் அடிப்படையில் இன்றும் கேள்வி நேரம் முடிந்ததும் சரவணன் வீடியோ விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினோம். இன்றும் சபாநாயகர் அனுமதியளிக்காததால் வெளிநடப்பு செய்தோம்.
நீதிமன்றத்தில் வழக்கு உள்ள போது அது குறித்து விவாதிக்கக் கூடாது என்று சபாநாயர் கூறுகிறார்.ஆனால் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கோடு தான் இது சேர்க்கப்பட்டுள்ளது, இதை விசாரணைக்கு ஏற்பது குறித்து நாளை தான் நீதிமன்றம் செய்கிறது. இந்த நிலையில் இது குறித்து விவாதிப்பதில் தவறில்லை.
இந்த விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்தும் முறையிட திட்டமிட்டுள்ளோம்.பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இங்கு இல்லாத நிலையில் அவர் தமிழகம் வந்ததம் சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications